தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் வெறிநாய்கள் கடித்து பலியாகும் ஆடுகளின் எண்ணிக்கை தொடர்வதால், ஆடு வளர்ப்போர் அச்சம் அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் 13 ஆவது வார்டு கருமாயிவட்டம், நேருநகர், பனந்தோப்பு பகுதியில் அதிகளவு ஆடுகள் வளர்க்கப்படுகிறது. அதில், வெளி மேய்சலுக்கும் செல்லும் ஆடுகள், வயல்வெளியில் கட்டிப் போடப்பட்டுள்ள ஆடுகளை, வெறிநாய்கள் கடித்து குதறிச் செல்வதால், பலியாகும் ஆடுகளின் எண்ணிக்கை தொடர்கிறது.
சில தினங்களுக்கு முன், வெறிநாய்கள் கடித்து குதறியதில் தம்மம்பட்டி கருமாயி வட்டத்தைச் சேர்ந்த துரை, அறிவு, செல்லம்மாள், ரமேஷ் ஆகியோரது ஆடுகள் பலியான நிலையில் சனிக்கிழமை இரவு, நேரு நகரைச் சேர்ந்த மணி (55) என்பவரின் தோட்டத்தில் கட்டிப்போட்டிருந்த 5 ஆடுகளை வெறிநாய்கள் கடித்து குதறி சாகடித்துள்ளது. இதுவரை 15 க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகளை வெறிநாய்கள் கடித்து பலியாகி உள்ளது. அதனால், இப்பகுதியில் ஆடு, கோழி வளர்க்கும் விவசாயிகள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது," தம்மம்பட்டி பேரூராட்சி நிர்வாகம், வெறிநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பலியான ஆடுகளுக்கு, அரசு உரிய இழப்பீட்டை தரவேண்டும் என்று கோரியுள்ளனர்.