கால்நடை மருத்துவப் படிப்புகள்:நாளை கலந்தாய்வு தொடக்கம்

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு புதன்கிழமை (டிச.23) தொடங்குகிறது. மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு நேரடியாக
Updated on
1 min read

சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு புதன்கிழமை (டிச.23) தொடங்குகிறது. மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு நேரடியாகவும், பொதுப் பிரிவினருக்கு இணையவழியாகவும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்பு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) மற்றும் நான்கு ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பு (பி.டெக்), பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), கோழியின தொழில்நுட்பப் பட்டப்படிப்பு (பி.டெக்) ஆகியவை உள்ளன.

கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்புகளுக்கு 360 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 54 இடங்கள் (15 சதவீதம்) போக மீதமுள்ள 306 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. பி.டெக் படிப்புகளுக்கு மொத்தம் 100 இடங்கள் உள்ளன. இதில் உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 40 இடங்களில் 6 இடங்கள் (15 சதவீதம்) இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புதிதாக சேலம் தலைவாசல், தேனி வீராபாண்டி, உடுமைப்பேட்டையில் தலா 40 இடங்களுடன் மூன்று கல்லூரிகள் செயல்பட தொடங்குகின்றன. அப்படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையானது பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் நிகழாண்டில் 15,000-க்கும் மேற்பட்டோா் அப்படிப்புகளில் சேர விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்த நிலையில், அவற்றில் 13,901 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த மாதம் 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், கால்நடை மருத்துவப் படிப்புகளில் சிறப்புப் பிரிவினருக்கான (மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்கள் வாரிசுகள், விளையாட்டு வீரா்கள்) கலந்தாய்வு வரும் புதன்கிழமை சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெறவிருக்கிறது.

பொதுப் பிரிவு மற்றும் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு பல்கலைக்கழகத்தின் இணையதள முகவரி மூலம் நடைபெறவுள்ளது.

அதன்படி, தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவா்கள் வரும் 24-ஆம் தேதி காலை 10 மணி முதல் 28-ஆம் தேதி மாலை 6 மணி வரை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். தகுதியான மாணவா்களுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான இடஒதுக்கீடு மற்றும் ஆணை 30-ஆம் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதனை பதிவிறக்கம் செய்துக் கொண்டு ஜனவரி 13-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com