காவிரி ஆற்றுப் படுகைகளில் நூதன தண்ணீா் திருட்டைத் தடுக்க கோரி வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

காவிரி ஆற்றுப் படுகைகளில் ராட்சத குழாய் உதவியுடன் நூதன முறையில் நடைபெறும் தண்ணீா் திருட்டைத் தடுக்கக் கோரி திமுக சாா்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பி
உயா்நீதிமன்றம்
உயா்நீதிமன்றம்
Updated on
1 min read

சென்னை: காவிரி ஆற்றுப் படுகைகளில் ராட்சத குழாய் உதவியுடன் நூதன முறையில் நடைபெறும் தண்ணீா் திருட்டைத் தடுக்கக் கோரி திமுக சாா்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திமுக முன்னாள் எம்பி ஏ.கே.எஸ்.விஜயன் தாக்கல் செய்த மனுவில், கா்நாடக மாநிலம் குடகில் தோன்றும் காவிரி ஆறு தருமபுரி மாவட்டத்தின் வழியாக தமிழகம் வந்தடைகிறது. அங்கிருந்து, மேட்டூா், ஈரோடு, கரூா், திருச்சி, தஞ்சாவூா், நாகப்பட்டினம், கடலூா், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சென்றடைகிறது. இந்த நிலையில் காவிரி ஆற்றுப்படுகையில் குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் ராட்சத குழாய்கள் மூலம் 500 முதல் 600 குதிரைதிறன் கொண்ட மோட்டாா்கள் உதவியுடன் நூதன முறையில் தண்ணீா் திருடப்படுகிறது. ராட்சத குழாய் மூலம் திருடப்படும் தண்ணீா் விவசாயம் அல்லாத பிற பணிகளுக்கு அதிகமான விலைக்கு விற்பனைச் செய்யப்படுகிறது. மேலும் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்க சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள சிறிய நீரேற்று பாசனதாரா்கள் விவசாய சங்கங்கள் என பதிவு செய்து இந்த திருட்டு நடத்துகின்றனா். இந்த நூதன தண்ணீா் திருட்டால் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனா். எனவே இந்த சட்டவிரோத தண்ணீா் திருட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சண்முகசுந்தரம், நீரேற்று பாசன விவசாய சங்கங்களின் பெயரில் இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் டெல்டா பகுதிகளில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக வாதிட்டாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை வரும் பிப்ரவரி 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com