எல்லாத்துறைகளிலும் அதிமுக அரசு புரட்சி செய்திருக்கிறது: தமிழக முதல்வர் பேச்சு
சங்கரன்கோவில்: தமிழகத்தில் அதிமுக அரசு எல்லாத்துறைகளிலும் புரட்சி செய்திருக்கிறது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி மகள் ஹரிணி, மருமகள் அனுசுயா பூப்புனித நீராட்டு விழாவில் புதன்கிழமை பங்கேற்று சிறுமிகளை வாழ்த்திப் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி மேலும் கூறியதாவது:
ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமியுடைய இல்ல விழாவை எங்களுடைய குடும்ப விழாவாக நாங்கள் பார்க்கிறோம். அவரை குடும்பத்தில் ஒருவராக பார்க்ககிறோம்.கழகம் என்றால் குடும்பம். இந்த குடும்ப நிகழ்ச்சியில் நாம் பங்கு பெறுவதை மகிழ்ச்சியாக பார்க்கின்றோம், மனமார உளமார அந்தக் குழந்தைகளை வாழ்த்துகிறேன்.
அமைச்சர் ராஜலட்சுமி ஜெயலலிதா அவர்களின் காலத்திலேயே இவர் தனது ஆதிதிராவிடர் நலத்துறை பொறுப்பை சிறந்த முறையில் நிர்வாகம் செய்தவர்.அவரது குடும்பம் ஆரம்ப காலத்திலிருந்து கட்சியில் இருக்கின்ற குடும்பம்.
மறைந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசி பெற்று சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் சிறப்பான முறையில் பணியாற்றினார். 2014 சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று ஜெயலலிதாவின் ஆசிபெற்று ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
இன்றைக்கு கழகம் என்று சொன்னாலே மறைந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,ஜெயலலிதா அவர்கள் தான் நம் மனதிலே தோன்றுவார்கள். அவர்கள் கட்சியை. வலிமையோடும் செழிப்போடும் ஆக்கினார். இன்று வளமோடும் செழிப்போடும் இருப்பதற்கு காரணம் நாம் அத்தனை பேரும் ஒரே குடும்பமாக இருந்து ஒரே வழியில் இருக்கிற காரணத்தால்தான் நம்முடைய கழகம் வலிமை பெற்று இருக்கிறது. இன்றைக்கு கழகமும் குடும்பமும் ஒன்றாக பிணைந்து நாட்டு மக்களுக்கு ஒரு வழிகாட்டியாக நாம் இருக்கிறோம்.
இன்றைக்கு ஏழை எளிய ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் கல்வித் தரம் மற்றும் கிராமப்புற அனைத்து மக்களின் பொருளாதார உயர்வுக்கு அதிமுக அரசு தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.அதற்காக ஏராளமான திட்டங்களை அதிமுக அரசு செய்து கொண்டிருக்கிறது.
கிராமப்புறத்தில் தான் அதிகமான அரசுப் பள்ளிகள் இருக்கின்றன. அங்கு பயிலும் ஏழை மாணவர்களின் கனவு மருத்துவராக வேண்டும் என்பது. அந்த கனவை நனவாக்கிய அரசு அ.திமுக அரசு. 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளியில் படித்த 313 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர இடம்கிடைத்துள்ளது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரிகளும், குளங்களும்,குட்டைகளும்,ஊருணிகளும் தூர்வாரப்பட்டது. இதன்மூலம் மழை நீர் முழுவதும் சேமிக்க கூடியநிலை ஏற்பட்டுள்ளது. நீ்ர்மேலாண்மைத் திட்டத்தை உருவாக்கித் தந்திருக்கிறோம். நீர்மேலாண்மையில் புரட்சி, தொழிலில் புரட்சி, எல்லாத்துறைகளிலும் புரட்சி செய்திருக்கிறது அதிமுக அரசு என்றார் அவர்.
முன்னதாக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி, அவரது கணவர் வி.முருகன் ஆகியோர் தமிழக முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
