பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு-புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு தீர்மானத்தின் படி, அரசு அலுவலகங்கள் செயல்படுவது போன்று நீதிமன்றமும் முழுமையாக செயல்பட வேண்டும், புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுமி ஜெயபிரியா கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முற்றிலுமாக ஒழிக்க அரசு கொள்கை அடிப்படையிலான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் திருநெல்வேலி வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் சிவசூரியநாராயணன் தலைமை வகித்தார். வழக்குரைஞர்கள் ரமேஷ், மணிகண்டன், செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.