சென்னை: தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) 3,827 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில் இன்று 61 பேர் பலியாகினர்.
சென்னையில் மட்டும் இன்று 1,747 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 3,827 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 61 பேர் பலியாகியுள்ளனர்.
இதில் தமிழகத்தில் மட்டும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டோர் 3,783 பேர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டோர் 44 பேர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,14,978 ஆக உயர்ந்துள்ளது. இதில் 66,571 பேர் குணமடைந்துவிட்டனர்.
இன்று ஒரே நாளில் 61 பேர் பலியானதைத் தொடர்ந்து தமிழகத்தில் கரோனாவுக்கு இதுவரை 1,571 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று கரோனாவுக்கு பலியானவர்களில் வேறு நோய் பாதிப்பு இல்லாத 8 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று 1,747 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்னையில் மட்டும் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 68,248ல் இருந்து 70,017 ஆக உயர்ந்துள்ளது. 3வது நாளாக சென்னையில் இன்றும் கரோனா பாதிப்பு இரண்டு ஆயிரத்துக்கும் குறைவாகவே பதிவாகியுள்ளது.
இன்று கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 61 பேர் (அரசு மருத்துவமனை -46, தனியார் மருத்துவமனை -15) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இன்று 3,793 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 65,571 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 46,833 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று மட்டும் 34,782 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 13,76,497 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.