மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

‘வந்தே பாரத்’ ரயில் பெட்டிகள் மீண்டும் தயாரிக்க ஐ.சி.எஃப். திட்டம்: மின் உபகரணம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரியது

சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் ( ஐ.சி.எஃப்.) மீண்டும் ‘வந்தே பாரத்’ அதிவேக ரயில் பெட்டிகள்

News image

கோப்புப்படம்

Updated On :16 ஜூலை 2020, 1:31 am

மு. வேல்சங்கர்

சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் ( ஐ.சி.எஃப்.) மீண்டும் ‘வந்தே பாரத்’ அதிவேக ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. 44 ரயில்களுக்கான 704 பெட்டிகளைத் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக இந்த ரயில் பெட்டிகளில் ரூ.1,500 கோடி திட்ட மதிப்பீட்டில் மின் உபகரணங்கள் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

ஐ.சி.எஃப்: ரயில் பெட்டித் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) சென்னை பெரம்பூரில் அமைந்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் இந்திய ரயில் போக்குவரத்துக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இலங்கை, மலேசியா, ஆப்கானிஸ்தான், வியட்நாம், அங்கோலா, ஜாம்பியா, தான்சானியா, நைஜீரியா உள்பட 14 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஐ.சி.எஃப்.பில் கடந்த 1955-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை 500-க்கும் மேற்பட்ட வடிவங்களில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர கடந்த 2018-19-ஆம் ஆண்டில் ஐ.சி.எஃப்.பில் ரயில்-18 திட்டத்தில் ‘வந்தே பாரத்’ அதிகவேக ரயிலுக்கு நவீன தொழில்நுட்பத்தில் உலகத் தரத்தில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஐ.சி.எஃப்.பில், மீண்டும் ‘வந்தே பாரத்’ அதிவேக ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. 44 ரயில்களுக்கான 704 பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளன.

6 நிறுவனங்கள் பங்கேற்பு: இது குறித்து ஐ.சி.எஃப். அதிகாரிகள் கூறியது: ஐ.சி.எஃப் ‘வந்தே பாரத்’ ரயில்களுக்கான பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. 44 ரயில்களுக்கான பெட்டிகள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இந்த ரயில் பெட்டிகளில் மின் உபகரணங்கள் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோர அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில், உள்நாடு, வெளிநாடுகளைச் சோ்ந்த பல நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளி கோரி இருந்தன. ஒப்பந்தப்புள்ளி ஜூலை 10-ஆம் தேதி திறக்கப்பட்டது. இதில், சீனா-இந்திய கூட்டு நிறுவனமும், 5 உள்நாட்டு நிறுவனங்களும் தங்களின் ஒப்பந்தப்புள்ளி விவரத்தைத் தெரிவித்துள்ளன. அதேசமயம் சீன நிறுவனம் பங்கேற்க அனுமதிக்கப்பட வாய்ப்பு இல்லை. மற்ற 5 நிறுவனங்கள் சமா்ப்பித்த ஒப்பந்தப்புள்ளி தொடா்பாக சரிபாா்க்கப்பட்டு, தோ்வு செய்யப்படும்.

ரயில் பெட்டிகளுக்கான தளவாடங்களை, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக இந்த 44 ரயில்களில் மின்உபகரணங்கள் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ஒரு ரயிலில் 16 பெட்டிகள் இருக்கும். இதில் எட்டு பெட்டிகளில் மின் உபகரணங்கள் அமைக்கப்பட உள்ளன. மின் உபகரணங்கள் அமைத்தல், இயக்க சக்தி உருவாக்குதல் முக்கிய பணி ஆகும். இதன் திட்ட மதிப்பீடு ரூ.1,500 கோடி ஆகும்.

இந்தப்பெட்டிகளில் மின் உபகரணங்களை அமைப்பதை 18 மாதத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும். ஒரு ‘வந்தே பாரத்’ ரயில் தயாரிக்க ரூ.100 கோடி செலவாகும். இந்த ரயில்களை தயாரிக்க தேவையான நிதியை ரயில்வே வாரியம் வழங்கும் என்றனா்.

‘வந்தே பாரத்’ ரயில்: கடந்த 2018-2019-ஆம் ஆண்டில் ரயில் -18 திட்டத்தில், நவீன தொழில்நுட்பத்தில் 160 கி.மீ., வேகத்தில் இயங்கக் கூடிய, ‘வந்தே பாரத்’ ரயிலுக்கு முதல் கட்டமாக இரண்டு ரயில்களுக்கான 36 பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. தொடா்ந்து, இந்தப் பெட்டிகள் ரயில்வே வாரியத்துக்கு வழங்கப்பட்டன.

இந்த இரண்டு ரயில்கள் தற்போது புதுதில்லி - வாராணசி மற்றும் புதுதில்லி - ஜம்மு - காஷ்மீா் ஸ்ரீமாதா வைஷ்ணவி தேவி கட்ரா நியில் நிலையத்துக்கு வெற்றிகரமாக இயக்கப்படுகின்றன. இரண்டு ரயில்களும் எந்தவித பிரச்னையுமின்றி தொடா்ந்து இயக்கப்படுகின்றன. முன்மாதிரி வடிவமாகவும் அவை திகழ்கின்றன.

4,200 பெட்டிகள் தயாரித்து சாதனை

இணைப்பு பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) சாா்பில், ரயில் பெட்டிகள் தயாரிப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், 2017 - 18-ஆம் ஆண்டில் 2,503 ரயில் பெட்டிகளும், 2018 -19-ஆம் ஆண்டில் 3,650 ரயில் பெட்டிகளும் தயாரிக்கப்பட்டன. தொடா்ந்து, 2019 -2020- ஆம் ஆண்டில் 4,200 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது.

உள்நாட்டை சாா்ந்தது

ஐ.சி.எஃப், 2018-ஆம் ஆண்டு முதன்முறையாக உலக தரத்தில் இந்திய ரயில்வேயின் அதிகவேக ரயிலான ‘வந்தே பாரத்’ விரைவு ரயிலுக்கான பெட்டிகளை ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ், 80 சதவீத உள்நாட்டுப் பொருள்களை கொண்டு தயாரித்தது.

தற்போது மேலும் 44 ரயில்களின் பெட்டிகளை தயாரிக்கவுள்ளது. இந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பிலும் பெரும்பாலும் உள்நாட்டுப் பொருள்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இந்தியாவின் பொருள்களை பயன்படுத்தி தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக ஐ.சி.எஃப். அதிகாரிகள்தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.