தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணிக்காக 1,239 மருத்துவர்கள் உள்பட 2,834 மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவப் பணியாளர்கள் நியமனம் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதன் முதல்கட்டமாக 530 மருத்துவர்கள், 4,893 செவிலியர்கள், 1,508 ஆய்வக உதவியாளர்கள் மற்றும் 2,715 சுகாதார ஆய்வாளர்களை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து அரசுப் பணியில் இல்லாத 574 முதுகலை மாணவர்கள், 665 மருத்துவர்கள், 365 ஆய்வக உதவியாளர்கள், ஆயிரத்து 230 பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் என 2,834 மருத்துவப் பணியாளர்களை 3 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கரோனா பரவி வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.