சிதம்பரம் அருகே கூத்தன்கோயில் ஊராட்சியில் சின்னவாய்க்கால் குளம் தூர்வாரும் பணியை கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள ஏரி மற்றும் குளங்களை தூர்வாரி ஆழப்படுத்திட உதிரவிடப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி ஒன்றியம் கூத்தன்கோயில் ஊராட்சியில் உள்ள சின்னவாய்க்கால் குளத்தினை தூர்வாரி ஆழப்படுத்தும் பணியினை சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் விமலா தலைமை வகித்தார். கூட்டுறவுச் சங்கத் தலைவர் சுந்தரமூர்த்தி, முன்னாள் நகரச் செயலாளர் தோப்பு சுந்தர், கூட்டுறவுச் சங்கத் தலைவர் வழக்குரைஞர் செல்வகணபதி, முன்னாள் ஆவின் தலைவர் சி.கே.சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் கோபிநாதன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகச் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் கலந்து கொண்டு ரூ.1 லட்சம் மதிப்பில் நடைபெற உள்ள சின்னவாய்க்கால் தூர்வாரி ஆழப்படுத்தும் பணியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜி பிரம்மராஜன், நிர்வாகிகள் ஜவான்குமார், பிரம்மராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வானன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருளானந்தம், ஊராட்சி செயலாளர் சேகர் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய பொறியாளர் சந்தாணகிருஷ்ணன் நன்றி கூறினார்.