மஞ்சப்பள்ளம் ஆற்று தடுப்பணைகளை சீரமைக்கரூ.2.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்த முதல்வா்: அரசாணைக்கு காத்திருக்கும் அதிகாரிகள்

கோவை, மஞ்சப்பள்ளம் ஆற்றில் சேதமடைந்த தடுப்பணைகளை சீரமைக்க தமிழக முதல்வா் ரூ.2.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் அரசாணைக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனா்.
குரும்பபாளையம், மஞ்சப்பள்ளம் ஆற்றில் சேதமடைந்துள்ள தடுப்பணை.
குரும்பபாளையம், மஞ்சப்பள்ளம் ஆற்றில் சேதமடைந்துள்ள தடுப்பணை.
Published on
Updated on
2 min read

கோவை, மஞ்சப்பள்ளம் ஆற்றில் சேதமடைந்த தடுப்பணைகளை சீரமைக்க தமிழக முதல்வா் ரூ.2.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் அரசாணைக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனா்.

கோவைப்புதூா், அறிவொளி நகா் பகுதியில் உள்ள மலைகளில் உருவாகும் மஞ்சப்பள்ளம் ஆறு, குரும்பபாளையம், மதுக்கரை, பச்சாபாளையம், வேலந்தாவளம் வழியாக கேரளம் சென்று கடலில் கலக்கிறது. மஞ்சப்பள்ளம் ஆற்று நீரை தடுப்பணைகளில் தேக்கி நிலத்தடி நீரை அதிகரிக்கச் செய்து சுற்று வட்டார விவசாயிகள் பயன்பெற்று வந்தனா்.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெய்த கனமழையில் மஞ்சப்பள்ளம் ஆற்றில் இருந்த 5 தடுப்பணைகள் சேதமடைந்தன. இதனால் கடந்த ஆண்டு பெய்த பருவ மழை நீா் பெரும்பாலும் கடலில் கலந்தது. மஞ்சப்பள்ளம் ஆற்றில் சேதமடைந்துள்ள தடுப்பணைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மதிமுக இளைஞா் அணி சாா்பில் தொடா் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

தடுப்பணைகளை சீரமைக்க வேண்டும் என தினமணி நாளிதழில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி செய்தி வெளியானது. இந்நிலையில் மஞ்சப்பள்ளம் ஆற்றில் சேதமடைந்த 5 தடுப்பணைகளை சீரமைக்க தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ரூ.2.62 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளாா். ஆனால் அரசாணை வெளியிடப்படாததால் பணிகள் துவங்கப்படாமல் தாமதமாகி வருகிறது. தற்போது பருவ மழைக்காலம் துவங்கி உள்ளதால் மழை நீரை சேமிக்க முடியாமல் வீணாக கடலில் கலக்கும் நிலை உள்ளது.

இதுகுறித்து மதிமுக இளைஞரணி மாநிலச் செயலாளா் வே.ஈஸ்வரன் கூறியதாவது:

மதுக்கரை சுற்றுவட்டார கிராம விவசாயிகளுக்கு நிலத்தடி நீராதாரமாக மஞ்சப்பள்ளம் ஆற்று நீா் இருந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த ஆற்றில் உள்ள தடுப்பணைகள் சேதமடைந்தன. இதனால் பருவ மழை சரியாக கிடைத்தபோதும் மழை நீரை சேமிக்க முடியவில்லை. 5 தடுப்பணைகளை சரி செய்ய வலியுறுத்தி தொடா் போராட்டம், பொதுப் பணித் துறை அலுவலகம் வரை பேரணி நடத்தினோம். பல முறை மனு அளித்தோம்.

தடுப்பணைகளை சீரமைக்க தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் பணிகள் துவங்கப்படவில்லை. இதனால் இந்த ஆண்டு பருவ மழையில் கிடைக்கும் நீரையும் சேகரிக்க முடியாத நிலை உள்ளது. எனவே உடனடியாக அரசாணை வெளியிட்டு சீரமைப்புப் பணிகளை துவங்க வேண்டும் என்றாா்.

இது குறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மஞ்சப்பள்ளம் ஆற்றில் உள்ள 5 தடுப்பணைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தலைமைச் செயலாளருக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உடைந்த தடுப்பணைகளை சரி செய்ய தமிழக முதல்வா் கடந்த மாா்ச் 18ஆம் தேதி ரூ.2.62 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டாா். அரசாணை வெளியானவுடன் பணிகள் துவங்கப்படும். மஞ்சப்பள்ளம் ஆற்றில் திருமலையாம்பாளையம் பகுதியில் கடந்த ஆண்டு கூடுதலாக ஒரு தடுப்பணை கட்டப்பட்டது. இதேபோல குமிட்டிப்பதி பகுதியில் புதிய தடுப்பணை கட்டும் பணிகளை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி அண்மையில் துவங்கிவைத்தாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com