சென்னை: தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நாமக்கல்லில் கம்ப்ரஸ்டு பயோ கேஸ் உற்பத்தி திட்ட இயந்திரத்தின் செயல்பாட்டை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தொடக்கி வைத்தார்.
மேலும், நாமக்கல், சேலம் உள்ளிட்ட இடங்களில் 5 சில்லறை விற்பனை நிலையங்களையும் தொடக்கி வைத்துள்ளார்.
25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டிக்கும் கம்ப்ரஸ்டு பயோ கேஸ் உற்பத்தி பணிகளை முதல்வர் இன்று தொடக்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் சார்பில் நாமக்கல்லில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கம்ப்ரஸ்டு பயோ கேஸ் (Compressed Bio Gas) உற்பத்திப் பணிகளுக்கான இயந்திரத்தையும், நாமக்கல், சேலம், புதுச்சத்திரம் மற்றும் ராசிபுரம் ஆகிய இடங்களில் ஐந்து சிபிஜி சில்லறை விற்பனை நிலையங்களையும் துவக்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் ஜெர்மனி நாட்டின் ஆயில் டாக்கிங் நிறுவனம் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சி நிறுவனமான ஐஓடி உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி சேவைகள் நிறுவனம், நாமக்கல்லில் 34 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு 2.4 மெகா வாட் திறன் கொண்ட பயோ –கேஸ் உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் பயோ கேஸிலிருந்து Compressed Bio Gas (CBG) தயாரிக்கும் வகையில் புதிய தொழிற்சாலைக்கு 25 கோடி ரூபாய் செலவில் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் இப்புதிய தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 15 டன் Compressed Bio Gas (CBG) மற்றும் 20 டன் உயிர் உரங்கள் (Bio-manure) தயாரிக்கப்படும்.
தமிழ்நாடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் நிறுவுதிறன் 15 ஆயிரத்து 876 மெகாவாட் ஆகும். இதில், நீர்மின் நிலைய நிறுவுதிறன் இரண்டாயிரத்து 322 மெகாவாட் ஆகவும், காற்றாலை மின் நிறுவுதிறன் 8 ஆயிரத்து 523 மெகாவாட் ஆகவும், சூரிய ஒளி மின்சக்தி நிறுவுதிறன் 4 ஆயிரத்து 54 மெகாவாட் ஆகவும், தாவரக்கழிவு மின் நிறுவுதிறன் 266 மெகாவாட் மற்றும் இணைமின் உற்பத்தி மின் நிறுவுதிறன் 711 மெகாவாட் ஆகும்.
தமிழ்நாட்டில் எரிவாயு சுழலி மின்நிலையங்களின் மொத்த நிறுவுதிறன் 1,013 மெகாவாட். இதில் மாநிலத்திற்கு 516 மெகாவாட்டும், தனியாருக்கு 497 மெகாவாடும் சொந்தமானதாகும்.
சென்னையில் அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, இரண்டு கூட்டு சுழற்சி முறையிலான எரிவாயு சுழலி மின் திட்டத்தினை சென்னையை சுற்றியுள்ள பகுதியில் தமிழ்நாடு அரசால் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.