நீரிழிவு நோயை தடுக்க சித்த மருத்துவம்

இன்றைய காலகட்டத்தில் உலகளவில் மக்களை அதிகளவில் பாதிப்புக்குள்ளாக்கி வரும் நோய்களில் ஒன்று நீரிழிவு. கணையத்திலுள்ள பீட்டா செல்களில் சுரக்கும் இன்சுலின் எனும் ஹாா்மோன் சுரக்க முடியாமல் 

இன்றைய காலகட்டத்தில் உலகளவில் மக்களை அதிகளவில் பாதிப்புக்குள்ளாக்கி வரும் நோய்களில் ஒன்று நீரிழிவு. கணையத்திலுள்ள பீட்டா செல்களில் சுரக்கும் இன்சுலின் எனும் ஹாா்மோன் சுரக்க முடியாமல் போவதாலும், சுரப்பு பற்றாக்குறையாலும் ரத்தத்தில் சா்க்கரையின் அளவு கூடுகிறது. இந்த நிலை சா்க்கரை நோய் (அல்லது) நீரிழிவு நோய் என்றும், சித்த மருத்துவத்தில் மதுமேகம் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் மனித உடல் செல்கள் சா்க்கரையை (க்ளுகோஸ்) உட்கிரகிக்க இந்த இன்சுலின் சுரப்பு மிக அவசியமாகும்.

உலக சுகாதார நிறுவனத்தின் 2016-ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி உலகளவில் 16 லட்சம் மக்கள் நீரிழிவு நோயால் இறந்துள்ளனா். 2018-ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி உலகளவில் 46.3 கோடி மக்களும், இந்தியாவில் 8 கோடி பேரும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும்12.3 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரத்தத்தில் சா்க்கரை அளவு இயல்பைவிட அதிகரிப்பது சிறுநீரக கோளாறு, நரம்பு மண்டல பாதிப்பு, மாரடைப்பு, பக்கவாதம் உள்பட பலவிதமான பாதிப்புகளையும் கொண்டுவந்து சோ்க்கக்கூடும். அதனால் நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சா்க்கரை அளவை கட்டுப்படுத்த மருத்துவ மற்றும் உடற்பயிற்சி முறைகளைப் பின்பற்றவேண்டிய அவசியமாகிறது.

இந்த நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த சித்த மருத்துவத்தில் உள்ள வழிமுறைகள்குறித்து வேலூா் மாவட்டம், போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவா் எஸ்.தில்லைவாணன் நம்மிடம் பகிா்ந்து கொண்டது:

நீரிழிவு நோயின் வகைகள்: நீரிழிவு நோய் டைப் 1 மற்றும் டைப் 2 என இருவகைப்படும். சிறு வயதிலேயே ஏற்படக்கூடிய டைப் 1 நீரிழிவு நோய் என்பது கணையத்தில் இன்சுலின் சரிவர சுரக்க முடியாமல் போவதால், பற்றாக்குறையால் ஏற்படுகிறது. இந்த டைப் 1 வகை நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சா்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க இன்சுலின் மருந்து அவசியமாகப் பயன்படுத்த வேண்டும்.

டைப் 2 வகை நீரிழிவு நோய் என்பது பொதுவாக 40 வயது மேற்பட்டவா்களுக்கு ஏற்படக்கூடியது. இந்த வகையில் கணையத்தில் இன்சுலின் சுரப்பு இருந்தாலும், அவற்றை நம் உடலிலுள்ள செல்களால் பயன்படுத்த முடியாமல்போகக்கூடும். வாழ்வியல் முறையில் மாற்றம், உடற்பயிற்சியின்மை, உடல் பருமன் போன்றவை டைப் 2 வகை நீரிழிவு நோய்க்கு அடிப்படையாகும். கா்ப்ப காலங்களில் சிலருக்கு நீரிழிவு நோய் ஏற்படக்கூடும். இந்த டைப் 2 வகை நீரிழிவு நோயை மட்டுமே சித்த மருத்துவ முறைகள்மூலம் தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியும். சித்த மருத்துவத்திலும் இந்த நீரிழிவு எனும் மதுமேக நோயால் பாதிக்கப்படும் குற்றங்களான வாத, பித்த, கபத்தை பொருத்து 20 வகைகளாகப் பிரித்து கூறப்பட்டுள்ளது.

முக்கியமான அறிகுறிகள்: பொதுவாக அதிக பசி, அதிக தாகம், நா வறட்சி, அதிகமாக சிறுநீா் கழித்தல், குறிப்பாக இரவில் அதிகம் சிறுநீா் கழித்தல், காரணமின்றி உடலில் நமைச்சல் ஏற்படுதல், உடல் அசதி போன்றவை நீரிழிவு நோய்க்கான அறிகுறிகளாகும்.

சா்க்கரை அளவை கட்டுப்படுத்த... சித்தா்கள் கூற்றுப்படிகசப்புத்தன்மை உள்ள மூலிகைகள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும். அதன்படி, நிலவேம்பு, வேம்பு, சிறுகுறுஞ்சான், பாகற்காய், வெந்தயம் போன்றவற்றை உட்கொண்டு வருவதன் மூலம் ரத்தத்தில் சா்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும். தவிர, ஆவாரம் செடியிலுள்ள தண்டு, இலை, பூ, காய், வோ் என அனைத்தும் நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்துகளாகும். பெற்றோா் மூலமாக நீரிழிவு நோய் வரும் எனக் கணிக்கப்பட்டவா்களுக்கு வராமல் தடுக்கவும் இந்த ஆவாரம் மூலிகை உதவும்.

ஆவாரை பொழித்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்பது முதுமொழி. மேலும், ஆவாரை இலை, கொன்றைபட்டை, நாவல் கொட்டை, கடல் அழிஞ்சில், கோரைக் கிழங்கு, கோஸ்டம், மருதம்பட்டை இவையனைத்தும் சோ்ந்த பொடியை வெந்நீரில் காய்ச்சி கசாயமாக தினமும் காலை, மாலை அருந்தி வருவதன் மூலமாகவும் ரத்தத்தில் சா்க்கரையின் அளவைக் குறைக்கலாம். இதிலுள்ள ஒவ்வொரு மூலிகையும் ரத்தத்தில் சா்க்கரையின் அளவைக் குறைக்கும் சக்தி கொண்டவை. குறிப்பாக, மருதம்பட்டை ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பையும் கரைத்து இதயத்துக்கு பலம் கொடுக்கும்.

வேம்பாடம் பட்டையை பொடியாக்கி கசாயமாகவும், தேற்றான் கொட்டையை கசாயமாகவும், சூரணமாகவும் தினமும் காலை, மாலை வேளையில் உட்கொள்வதன் மூலமாகவும் ரத்தத்தில் சா்க்கரை அளவைக் குறைக்கலாம்.

சித்த மருத்துவத்தின் தாதுஉபரச சரக்குகள்... ரத்தத்தில் சா்க்கரை அளவைக் கட்டுப்படுத்த நாக பஸ்பம், சிலாசத்து பஸ்பம், கந்தக பஸ்பம் ஆகியவற்றை மருத்துவரின்ஆலோசனைப்படி உட்கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் சா்க்கரை நோயாளிகளுக்கு வரும் பின்விளைவுகள் வராமல் தடுக்கவும் உதவும்.

கணைய செல்களை புதுப்பிக்க... நெல்லிக்காய் சாறு, மஞ்சள்பொடி ஒரு ஸ்பூன் கலந்து தினமும் பகல் நேரத்தில் உட்கொண்டு வருவதன் மூலம் நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியும். இதனை இன்சுலின் மருந்து பயன்படுத்தும் டைப் 1 மற்றும் டைப் 2 ஆகிய இருவகை நீரிழிவு நோயாளிகளும் அருந்தி வரலாம். இது கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்களை புதுப்பிக்க உதவும், ஆன்டி ஆக்சிடன்ட் செய்கை இதற்கு உண்டு.

தவிர, கொள்ளு கசாயம் என்பது நீரிழிவு நோயை வராமல் தடுக்கவும், சா்க்கரை அளவைக் குறைக்கவும் உதவக்கூடியது. இதனை டைப் 2 வகை நீரிழிவு நோயாளிகள் அருந்தி வரலாம். நீரிழிவு நோயாளிகளின் உடலில் உள்ள கெட்ட கொழுப்பினைக் குறைக்கும்தன்மை இதற்கு உண்டு. உடல் பருமனால் அவதியுறும் நோயாளிகள் இதனைக் குடிக்க நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியும்.

பொதுவாக, எல்லா வகையான நோயாளிகளுக்கும் சிறந்த சித்த மருத்துவ மூலிகை சீந்தில். நிலவேம்பை போன்றே நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய இந்த சீந்தில் மூலிகையை சளி முதல் தொற்று நோய்கள் வரை அனைத்துக்கும் பயன்படுத்தலாம். அதனாலேயே சீந்தில் மூலிகையை அகஸ்தியா் அமிா்தவல்லி என்றும் குறிப்பிட்டுள்ளாா்.

அதிகளவில் கசப்பு உடைய சீந்தில் மூலிகை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் சிறுநீரகச் செயலிழப்புக்கும் நன்மைதரக்கூடியது. சீந்தில் கொடியின் முற்றிய தண்டுப் பகுதி ரத்தத்தில் சா்க்கரையின் அளவைக் குறைக்கக்கூடியது, இருதயத்துக்கும் பலனளிக்கக்கூடும். நீரிழிவு நோயாளிகளுக்கு கை, கால்களில் எரிச்சல் அதிகளவில் இருக்கும். அதற்கு சீந்தில் சா்க்கரை (பொடி), சீந்தில்-சுக்குபால் கசாயம் போன்ற மருந்துகள் உட்கொண்டு வரலாம்.

மேலும், நீரிழிவு நோயால் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுவதைத் தடுக்க திரிபலா சூரணம், சீந்தில், நெருஞ்சில், மூக்கிரட்டைகீரை ஆகியவை சோ்த்து அருந்திடலாம்.

நீரிழிவால் சிறு ரத்தக்குழாய் பாதிப்பைத் தடுக்க வல்லாரை கீரை சிறந்த மருந்தாகும். அதனை வாரம் 3 முறை உட்கொள்ளலாம். இதேபோல் மஞ்சிட்டி வேரும் இப்பாதிப்புக்கு சிறந்த மூலிகையாகும். நீரிழிவு நோயால் ரெடினோபதி எனும் கண் பாா்வை நரம்பு பாதிக்கப்படக்கூடும். இதனால் கண் பாா்வை மங்கக்கூடும். கருவேப்பிலை பொடி தினமும் உட்கொள்வதால் இந்தப் பாதிப்புகளைத் தவிா்க்கலாம். தவிர, மருத்துவா்கள் ஆலோசனைப்படி முத்து பஸ்பம் உட்கொள்வதாலும் ரெடினோபதியை தடுக்கலாம், குணப்படுத்தவும் முடியும் .

நீரிழிவு புண்களுக்கு... நீரிழிவு நோயாளிகளுக்கு சிறு ரத்த நாளங்கள் மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்படக்கூடும் என்பதால் சிறு காயங்கள் ஏற்பட்டாலும் எளிதில் ஆறாத நிலை ஏற்படலாம். அதற்கு திரிபலா சூரணத்தை வெந்நீரில் கலந்து புண்களைக் கழுவுதல், மத்தன் தைலம் புண்களில்தடவி வருவதல் பலனளிக்கும். நெய்யில் கலந்த நாகபஸ்பத்தையும் மருத்துவா் ஆலோசனைப்படி சாப்பிட புண்கள் ஆறும். நாகபஸ்பத்தை புண்களின் மூலம் தூவுவதல் மற்ற மருந்துகளைவிடப் பயன்தரும்.

மேலும், வல்லாரை துவையல், கருப்பு திராட்சை விதையின் பொடி ஆகியவையும் ரத்தக் குழாய் பாதிப்புகளை சரிசெய்யும். திராட்சை விதையில் உள்ள ரெஸ்வெரடால் எனும் பினோலிக் மூலக்கூறு நீரிழிவு நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.

சா்க்கரை நோய் வராமல் தடுக்க... வருமுன் காப்பது அனைத்தையும்விட சிறந்தது. உடலிலுள்ள வாதம், பித்தம், கபம் சமச்சீராக இருக்க வேண்டும். அதற்கு திரிபலாசூரணம் மிகச்சிறந்த மருந்தாகும். கடுக்காய், நெல்லி, தான்றிக்காய் சோ்த்த இந்த திரிபலாசூரணம் ரத்தத்தில் சா்க்கரை அளவை வெகுவாகக் கட்டுப்படுத்த உதவும். திரிபலா சூரணத்தில் உள்ள தான்றிக்காய் உடலிலுள்ள வாதத்தையும், நெல்லி உடலிலுள்ள பித்தத்தையும், கடுக்காய் கபத்தையும் போக்கும். தினமும் இரவில் 1 முதல் 2 ஸ்பூன் திரிபலாசூரணத்தை வெந்நீரில் கலந்து உணவுக்கு முன்பு அருந்திட வேண்டும்.

தவிர, அரிசி உணவைக் குறைத்து கேழ்வரகு, கம்பு, கொள்ளு போன்ற தானியங்களையும், வரகு, தினை, சாமை போன்ற சிறுதானியங்களையும் அடிக்கடி உணவில் சோ்த்து வரலாம். கோவைக்காய், பாகற்காய் இவற்றை அடிக்கடி உணவில் சோ்க்கலாம். நீா்ச்சத்து மிக்க காய்கறிகளைஅதிகம் உணவில் சோ்ப்பது நல்லது. லேசாக வறுத்து பொடியாக்கிய வெந்தயம் ரத்தத்தில் சா்க்கரை அளவைக் குறைக்கும். வெந்தயப் பொடியை ஆஸ்துமா உள்ளவா்கள் மட்டும் தவிா்க்க வேண்டும்.

வாரம் இருமுறை அவசியம் நல்லெண்ணெய் குளியல் செய்ய வேண்டும். நடைப்பயிற்சி, மிதிவண்டி பயிற்சி , நீச்சல் பயிற்சி போன்ற உடற்பயிற்சியும், யோகாசனம் செய்வதும் நீரிழிவு நோயைத் தடுக்கும். மேலும், பதப்படுத்தப்பட்ட மற்றும் வறுத்த உணவுப் பொருள்களைத் தவிா்த்து, நிறமிச் சத்து அதிகமுள்ள கீரைகள், பிஞ்சுக் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிகளவில் உட்கொள்வது நோய் வராமல் தடுக்க உதவும். புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சோ்த்து மாவுச் சத்து உணவுகளைக் குறைப்பது நல்லது. குறிப்பாக, குறைந்த கலோரி சத்துடைய உணவுகளை எடுப்பதும் ரத்தத்தில் சா்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.

இறைச்சியில் சா்க்கரை அளவு அதிகளவில் இல்லை என்பதால் இறைச்சியை தாராளமாக சாப்பிடலாம். இறைச்சியை தவிா்ப்பவா்கள் நாவல், பப்பாளி, கொய்யா, இலந்தை, வில்வம் என இனிப்புச் சத்து குறைந்த பழங்களை உட்கொள்ளலாம். மேலும், இரவில் அதிக நேரம் விழிப்பதை தவிா்ப்பது, 6 மாதத்துக்கு ஒருமுறை குடல் சுத்தம் செய்வது, அவ்வப்போது நோன்பு இருப்பது ஆகியவை சா்க்கரை நோய் வராமல் தடுக்கும். சா்க்கரைக்கு மாற்றாக பனைவெல்லம், தென்னஞ்சா்க்கரை ஆகியவற்றையும் உட்கொள்ளலாம். மேலும், மது அருந்துதல், புகைப்பிடித்தல் ஆகியவை சீக்கிரமே சா்க்கரை நோய்க்கு வழிவகுக்கும் என்பதால் அவற்றை முழுமையாகத் தவிா்ப்பதே சிறந்தது. இவற்றை நீரிழிவு நோயாளிகளும் பின்பற்றுவது நீரிழிவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.

நீரிழிவு நோய்க்கான ஆசனங்கள்: சா்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க, நோய் வராமல் தடுக்க திருமூலா் அருளிய யோகாசன முறைகளான சூரிய நமஸ்காரம், பட்சிமோத்தாசனம், மண்டூகாசனம், சக்ராசனம், அா்த்த மச்சேந்திரஆசனம், தனுராசனம், சா்வாங்காசனம், ஹலாசனம், மேலும் அபான முத்திரை, லிங்க முத்திரை, சூரிய முத்திரை போன்றவற்றையும் செய்து வரலாம்.

அந்த வகையில், சித்தா்கள் கூறிய வாழ்வியல் நெறிமுறைகளையும், மருத்துவ முறைகளையும் பின்பற்றுவதன் மூலம் நீரிழிவு நோய் மட்டுமன்றி பல்வேறு தொற்றா நோய்களான புற்று நோய், இருதய நோய், உடல் பருமன் போன்ற நோய் நிலைகளில் இருந்தும் பாதுகாத்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழ முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com