காரைக்குடி அருகே பள்ளத்தூர் மகளிர் கல்லூரியில் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்டக் கிளை சார்பில் மாற்றுத்திறனாளி மற்றும் எச்.ஐ.வி நோயாளி குழந்தைகளுக்கு நிவாரண பொருள்களை முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி வழங்கினார்.
இந்திய செஞ்சிலுவைச் சங்க சிவகங்கை மாவட்டக் கிளை சார்பில் புதன்கிழமை இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. காரைக்குடி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.எஸ். பாலமுருகன் தலைமை வகித்து அரிசி, மளிகை பொருள், கபசுர குடிநீர் பொடி, முகக்கவசம் ஆகியவை வழங்கினார்.
மேலும், கல்லூரி செயலர் ஒ.ஏ.ஏ. அனந்த பத்மநாபன் மாற்றுத்திறனாளிகளுக்குப் பொருள்கள் வழங்கினார். நிகழ்வில் கல்லூரி முதல்வர் எஸ். ராமுத்தாய், செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் தலைவர் சொ. பகீரத நாச்சியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒய் ஆர் சி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜி. வினாயகமூர்த்தி, ஒய்ஆர்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பள்ளத்தூர் மகளிர் கல்லூரி பேராசிரியர் த.சித்ரா, செஞ்சிலுவைச் சங்க மாவட்ட துணைத் தலைவர் வி. சுந்தர ராமன், மாவட்டச் செயலாளர் அ. அனந்த கிருஷ்ணன், பொருளாளர் கே. ராமமூர்த்தி, ஆட்சிக் குழு உறுப்பினர் கே.எல். பூவாலை, ஐஆர்சிஎஸ் களப்பணியாளர் கே. கண்ணன், கண்ணங்குடி பள்ளி தலைமையாசிரியர் பாக்கியம் சுந்தர், காரைக்குடி சுழற்சங்க முன்னாள் தலைவர் பி.வி. சுவாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.