நாமக்கல்: மறைந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
நாமக்கல்லில் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளது. திமுக இளைஞர் அணியில் பொறுப்பு வகிப்பவர்கள் வெற்றிக்கான உத்திகளை மேற்கொள்ள வேண்டும். பதவி கிடைத்து விட்டது என்று மட்டும் எண்ணாமல் களத்தில் இறங்கிப் பணியாற்ற வேண்டும். வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி, திமுக செய்த சாதனைகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தெரிவிக்க வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறப்போவது உறுதி. அலட்சியம் காட்டாமல் தீவிரமாக பணியாற்றி தலைவரிடம் வெற்றியை சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மறைந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மரணத்தில் மர்மம் நிறைந்துள்ளது. அவரது குடும்பத்தினரிடம் உரியதை பெற்றுக் கொண்டு உடலை ஒப்படைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக தலைவர் தேர்தலில் நிற்பாரா என முதல்வர் சந்தேகம் எழுப்பியுள்ளார். முதலில் அவர் தேர்தல் களத்திற்கு வருவாரா என்பதை காலம் தீர்மானிக்கும் என்றார்.
முன்னதாக 10,12-ஆம் வகுப்பு ஏழை மாணவிகள் 10க்கும் மேற்பட்டோருக்கு செல்லிடப்பேசிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இக்கூட்டத்தில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ். மூர்த்தி முற்றும் இளைஞரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.