திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பிரசித்திப் பெற்ற கந்த சஷ்டி விழா ஞாயிற்றுக்கிழமை காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
கரோனா பொதுமுடக்கத்தால் திருக்கோவிலில் தங்க அனுமதியில்லாததால் பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே விரதத்தை துவக்கினர்.
கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திருக்கோவில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது, தொடர்ந்து காலை 6 மணியளவில் சுவாமி ஜயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார்.
தொடர்ந்து, யாகசாலையில் பூஜைகளாகி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மதியம் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடைபெற்றவுடன் யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது.
அதன்பின் சுவாமி ஜயந்திநாதர் யாகசாலையில் இருந்து தங்கசப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி 108 மகாதேவர் சன்னதி முன்பு சேர்ந்தார்.
வரும் 19 ஆம் தேதி வரை தினமும் 10 ஆயிரம் பேர் வீதம் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.