நிவர் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் புயல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.
இதனால் பாதுகாப்பற்ற இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும், பொதுமக்கள் வெளியே நடமாடுவதைத் தவிர்த்து வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் கடற்கரைப் பகுதியில் உள்ள ஈ.சி.ஆர். சாலை மூடப்பட்டுள்ளது. குறிப்பாக புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் மாவட்டத்தில் நுழையும் சின்ன கோட்டக்குப்பம் பகுதியில் சாலையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மரக்காணம் அருகே உள்ள அனுமந்தை சுங்கச்சாவடி மூடப்பட்டது. அந்த வழியாக சென்னை மார்க்கத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டத்துக்குள் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.