கோவை பேரூர் அடுத்த நாகராஜபுரம் அருகே குளத்தில் இறங்கி தாமரை பறிக்க முயன்ற சகோதரர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை வடவள்ளி அடுத்த இடையர்பாளையம் கோவில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. கூலித்தொழிலாளியான இவரது மகன்கள் ஆனந்த், ஹரீஸ். இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் பேரூர் சாலையில் சென்றுள்ளனர். அப்போது நாகராஜபுரம் கொலராம்பதி குளத்தில் தாமரை இருந்ததை பார்த்து, வண்டியை நிறுத்தி விட்டு, வேடிக்கை பார்த்ததாக தெரிகிறது. அப்போது ஆனந்த் , ஹரீஸ் இருவரும் குளத்தில் இறங்கி தாமரை பறிக்க முயன்றுள்ளனர். மற்றொரு நண்பர் தரையில் இருந்துள்ளார்.
அப்போது ஹரீஸ் சேற்றில் சிக்கி குளத்தில் மூழ்கியுள்ளார். இதை கண்ட அவரது அண்ணன் ஆனந்த் காப்பாற்ற முயன்ற போது அவரும் குளத்தில் மூழ்கி சேற்றில் சிக்கிக்கொண்டதாக தெரிகிறது. இதைக் கண்ட தரையில் இருந்த நண்பர் அக்கம்பக்கத்தினரை அழைத்து, மூழ்கிய ஹரீஸை சடலமாக மீட்டனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். தகவலிறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், குளத்தில் மூழ்கிய ஆனந்த் உடலை மீட்டனர். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.