பென்னாகரம்: தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.
தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம் , பிலிகுண்டுலு, கேரட்டி, ராசிமணல், கெம்பாகரை, மொசல் மடுவு, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.
இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி நொடிக்கு 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்து தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருந்தது.
பின்னா் 10 மணியளவில் நீா்வரத்து தொடர்ந்து அதிகரித்து நொடிக்கு 20 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் பிரதான அருவி, மெயின் அருவி, சினி அருவி, ஐவா் பாணி உள்ளிட்ட அருவிகளில் வெளியே தெரிந்த பாறை திட்டுகள் அனைத்தும் தற்போது நீரில் மூழ்கிவிட்டன.
மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையினால் நீர்வரத்து அதிகரித்து காணப்படும் நிலையில், காவிரி ஆற்றில் வரும் நீரானது செந்நிறமாக மாறி வருகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவானது கடந்த சில நாள்களாக அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால், நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.