சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் எலி
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் எலி நடமாடும் விடியோ காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் எலி நடமாடும் விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆக்சிஜன் பைப் லைனை தவறுதலாக எலி கடித்து விட்டால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு நோயாளிகள் உயிரிழக்கவும் வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, சேலம் அரசு மருத்துவமனை முதன்மையர் மருத்துவர் பாலாஜிநாதனிடம் கேட்ட போது, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் உணவுப்பொருள்களை சிந்துவதாலும், தற்போது மழைக்காலம் என்பதாலும் வெளியே சுற்றி திரியும் எலிகள் மருத்துவமனைக்குள் வந்துவிட்டது. இதைக் கட்டுப்படுத்தி நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.