இந்தியாவிலேயே மருத்துவத் துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனியில் கட்டப்பட்டுள்ள தனியார் மருத்துவமனையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைத்தார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக அரசு பல முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவிலேயே தமிழகம் மருத்துவத்துறையில் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது.
11 புதிய மருத்துவ கல்லூரிகள் மூலம் கூடுதலாக 1,650 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மருத்துவத்துறையில் 2030ஆம் ஆண்டுக்கான இலக்கை தமிழகம் தற்போதே அடைந்துவிட்டது. அரசு மருத்துவமனைகளில் கடந்த 3 ஆண்டில் மட்டும் 56 சி.டி.ஸ்கேன், 22 எம்.ஆர்.ஐ ஸ்கேன் வழங்கப்பட்டுள்ளது.
வளர்ந்த நாடுகளை காட்டிலும், கரோனா வைரஸ் தொற்றை குறுகிய காலத்தில் கட்டுப்படுத்தியது நம் நாடுதான். நோயாளிகளிடம் வித்தியாசம் பாராமல் தரமான மருத்துவம் வழங்க வேண்டும் என்றார்.