தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான உடல் பரிசோதனைக்கு சென்னை மியாட் மருத்துவமனைக்கு சென்ற நிலையில் லேசான கரோனா அறிகுறிகள் இருந்ததை அடுத்து, அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும், விஜயகாந்த் தற்போது பூரண உடல் நடத்துடன் இருப்பதாக தேமுதிக தலைமைக் கழகம் இன்று (வியாழக்கிழமை) காலை தகவல் வெளியிட்டது.
இதையடுத்து மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கரோனா பரிசோதனையில் கடந்த 22 ஆம் தேதி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தற்போது அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. அவர் கூடிய விரைவில் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.