சென்னை: சென்னை மாநகராட்சியின் நடமாடும் அங்காடி திட்டத்தில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் அல்லது வணிகர்கள் அதற்கான அனுமதி சீட்டுக்காக விண்ணப்பிக்க மண்டல அலுவலகங்களை அனுகலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், சென்னை மாநகராட்சி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையோடு இணைந்து சென்னை மக்களுக்கு காயக்றி, மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை அவர்களின் வீட்டு வாசலிலேயே கொண்டு சென்று வழங்க நடமாடும் அங்காடிகளை அமைக்க முடிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் இந்த முயற்சிக்காக விண்ணப்பிக்கும் வணிகர்களுக்கு பதாகைகள் மற்றும் அனுமதி சீட்டுகள் வழங்கும். உங்கள் வாகனத்தில் இந்த பதாகைகளும், உங்களிடம் அனுமதி சீட்டும் இருந்தால், சென்னை மாநகருக்குள் எவ்வித இடையூறும் இல்லாமல் நீங்கள் சென்று அத்தியாவசியப் பொருட்களை நம் மக்களுக்கு வழங்க முடியும்.
ஆர்வமுள்ள நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட வணிகர்கள் தங்களது அனுமதி சீட்டைப் பெற அந்தந்த மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் உதவிக்கு மண்டல வாரியான எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.