தஞ்சாவூர் பெரியகோயிலில் குடமுழுக்கு: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

தஞ்சை பெரியகோயில் கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு வெகு விமரிசையாக புதன்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் பெரியகோயிலில் குடமுழுக்கு: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Published on
Updated on
2 min read

தஞ்சை பெரியகோயில் கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு வெகு விமரிசையாக புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழா ஜன. 27ஆம் தேதி யஜமான அனுக்ஞை வைபவத்துடன் தொடங்கப்பட்டது. இதையடுத்து, முதல் கால யாக பூஜைகள் பிப். 1-ம் தேதி மாலை தொடங்கியது.

தொடர்ந்து, பிப். 2-ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜைகளும், மாலையில் மூன்றாம் கால யாக பூஜைகளும், பிப். 3-ம் தேதி காலை நான்காம் கால யாக பூஜைகளும், மாலையில் ஐந்தாம் கால யாக பூஜைகளும், செவ்வாய்க்கிழமை (பிப்.4) காலை ஆறாம் கால யாக பூஜைகளும், மாலையில் ஏழாம் கால யாக பூஜைகளும் நடைபெற்றன.

இந்த நிலையில், புதன்கிழமை (பிப்.5) அதிகாலை 4.30 மணிக்கு எட்டாம் கால யாகம் உள்ளிட்ட பூஜைகளும், காலை 7 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, 7.25 மணிக்கு திருக்கலசங்கள் எழுந்தருளல் ஆகியவையும் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து, அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுர குடமுழுக்கும், பெரியநாயகி உடனுறை பெருவுடையார் மற்றும் அனைத்து மூலவர்களுக்கு குடமுழுக்கும், மஹா தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்கியருளல் ஆகியவை நடைபெற்றன. இதில், கோயில் உள் பிரகாரத்தில் கிட்டத்தட்ட 10,000 பேர் பங்கேற்று வழிபட்டனர்.

இதேபோல, வெளிப்பிரகாரம், கிரிவலப் பாதை, மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கானோர் நின்று தரிசனம் செய்தனர். மேலும், சுற்றியுள்ளப் பகுதிகளில் உள்ள மக்கள் தங்களது வீட்டு மாடியில் இருந்து கண்டுகளித்தனர்.

இன்று மாலை 6 மணிக்கு பெரியநாயகி உடனுறை பெருவுடையாருக்கு பேரபிஷேகம், இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா காட்சியருளல் ஆகியவை நடைபெறவுள்ளன. 

குடமுழுக்கையொட்டி மாநகரில் ஏறத்தாழ 5,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பக்தர்களின் வசதிக்காக நகருக்குள் 175 வேன்கள் இயக்கப்பட்டன.

நகருக்குள் 175 வேன்கள் இயக்கம்: 

பக்தர்களின் வசதிக்காக மாநகரில் 21 தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளியூரிலிருந்து வரும் மக்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும், புதிய பேருந்து நிலையம், கரந்தை தற்காலிகப் பேருந்து நிலையம் மட்டுமல்லாமல், பட்டுக்கோட்டை சாலையில் புதுப்பட்டினத்தில் தற்காலிக பேருந்து நிலையமும் அமைக்கப்பட்டுள்ளன. 

கும்பகோண வழித்தடப் பேருந்துகள் பள்ளியக்ரஹார புறவழிச்சாலை வரையும், நாகை வழிதடப் பேருந்துகள் புறவழிச்சாலை பெஸ்ட் பள்ளி வரையிலும், பட்டுக்கோட்டை வழித்தடப் பேருந்துகள் பட்டுக்கோட்டை புறவழிச்சாலை வரையிலும் இயக்கப்பட்டன. 

இதேபோல, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி வழித்தடப் பேருந்துகள் வழக்கம்போல புதிய பேருந்து நிலையம் வரை இயக்கப்படுகின்றன. இப்பகுதிகளிலிருந்து ரயிலடி, கரந்தை வரை 175 சுற்றுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  

பக்தர்கள் எளிதாகக் கோயிலுக்குச் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com