
திருவொற்றியூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. சாமி உடலுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
திருவொற்றியூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. சாமி உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை (பிப். 27) காலமானார். திருவொற்றியூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் கே.பி.பி. சாமி (59). இவர் கடந்த ஓராண்டாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை 6.10 மணியளவில் அவரது உடல்நிலை மோசமாகி திருவொற்றியூர் கே.வி.கே. குப்பத்தில் உள்ள அவரது வீட்டிலேயே மரணமடைந்தார்.
அவரது உடலுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்த அவரது இல்லமான கேவிகே குப்பத்திற்கு நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார். அப்போது கேபிபி சாமி மகன் பரிசு பிரபாகரனிடம் கேபிபி சாமி தம்பி கேபிள் சங்கரின் கைகளை பிடித்து இரங்கல் தெரிவித்தார். அதன் பின்பு அங்கு இருந்த பத்திரிகையாளர்களிடம் அவர் கூறியதாவது; கேபிபி சாமி உடல் நலிவுற்று இருந்தபோது நான் பலமுறை அவரை நேரில் சென்று பார்த்தேன். அப்போதெல்லாம் அவர் தன் உடல்நலத்தை பற்றி பொருட்படுத்தாமல் கழகத்தின் வளர்ச்சி, திருவொற்றியூர் வளர்ச்சி மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நான் மருத்துவமனையில் அவரை சென்று பார்த்தபோது என் கைகளைப் பிடித்துக் கொண்டு தன்னை மறந்து நாகூர் அனிபாவின் கழக பாடலை பாடி எங்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கினார். நாங்கள் அவர் நலம் பெற்று திரும்பி வருவார் என எதிர்பார்த்தோம். ஆனால் இன்று காலை திடீரென அவரது மரணம் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர் இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். ஒருமுறை தலைவர் கலைஞர் அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றினார். மீனவர்களுக்கு என்ன பிரச்னை ஏற்பட்டாலும் உடனே தலைவர் கலைஞரிடமும் அதேபோல் துணை முதல்வர் என்ற முறையில் என்னிடம் சுட்டிக்காட்டி அதற்கு உடனடி தீர்வு கண்டார்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது கூட சட்டப்பேரவையிலும் பல்வேறு கேள்விகளை உடனே கேட்பார். மீனவ சமுதாய நலனுக்காக அவர் பல்வேறு பிரச்னைகளை அறிந்து அதற்கு தீர்வு பெற்றிருந்தார். அவரது இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல திமுகவிற்கு மட்டுமல்ல மீனவ சமுதாயத்திற்கு மாபெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் அவரது சகோதரர்கள் அவரது செல்வங்கள் உற்றார் உறவினர்கள் மீனவ சமுதாய மக்கள் அனைவருக்கும் திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மு க ஸ்டாலின் உடன் முன்னாள் அமைச்சர்கள் ஏவா வேலு கே என் நேரு ஆடி சேகர் கும்மிடிப்பூண்டி வேணு முன்னாள் அமைச்சர் க சுந்தரம் விஜி ராஜேந்திரன்உட்பட ஏராளமானோர் வந்திருந்தனர். மேலும் திருவொற்றியூர் சுகம் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் டிபிடி சத்திய குமார் ஷீலா சத்திய குமார் ஆகாஷ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஏ.செல்வராஜ் குமார் தொழிலதிபர் ஜி வரதராஜன் தொழிற்சங்க தலைவர் என் துரைராஜ் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.