

சென்னை: சென்னை தரமணியில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக பேராசிரியர் இரா.சந்திரசேகரன் (47) நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் இந்த நிறுவனம் அமைக்கப்பட்டது முதல் கடந்த 12 ஆண்டுகளாக நிரந்தர இயக்குநர் எவரும் நியமிக்கப்படாத நிலையில் தற்போது அந்தப் பணியிடம் நிரப்பப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து 2008-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி முதல் சென்னை தரமணியில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இது மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி நிறுவனம் ஆகும். தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் உலகறியச் செய்யும் வகையில் பல்வேறு பணிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
செம்மொழி நிறுவனத்தின் ஆட்சிக்குழு தலைவராக தமிழக முதல்வர் இருக்கிறார். துணைத் தலைவராக பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். இந்த நிறுவனத்துக்கு கடந்த 12 ஆண்டுகளாக நிரந்தர இயக்குநர் நியமிக்கப்படவில்லை. திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் பதிவாளர் அ.பழனிவேல் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பைக் கூடுதலாக கவனித்து வந்தார்.
இந்தநிலையில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக, பேராசிரியர் இரா.சந்திரசேகரன், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த மூன்றாண்டுகளுக்கு இந்தப் பதவியில் தொடருவார். பேராசிரியர் சந்திரசேகரனின் சொந்த ஊர் நாமக்கல் அருகில் உள்ள முத்துடையார்பாளையம் ஆகும். கடந்த 20 ஆண்டுகளாக கல்விப் பணியில் ஈடுபட்டு வரும் இவர், தற்போது திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
ஆய்வு நூல்கள், பாடநூல்கள் என 10-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தமிழ்,வரலாறு, சமூகவியல், அரசியல் அறிவியல், சமயமும்-தத்துவமும் ஆகிய ஐந்து துறைகளில் எம்.ஏ. பட்டம் பெற்றுள்ளார். தமிழ், சமயம் ஆகிய துறைகளில் முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். தமிழாய்வுக்காக 2009-ஆம் ஆண்டுக்கான குடியரசுத் தலைவர் விருதைப் பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.