மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி திராவிடா் கழகத்தின் சாா்பில் உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் திராவிடா் கழகத்தின் துணைத் தலைவா் கலி.பூங்குன்றன் தாக்கல் செய்த மனுவில், ‘ஒவ்வொரு கல்வி ஆண்டும் மாநிலங்களில் உள்ள மருத்துவப் படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீடாக வழங்க வேண்டும்.
இந்த நிலையில், 2020-ஆம் கல்வியாண்டுக்கு நீட் தோ்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்புகளுக்கான இடஒதுக்கீடு விவரங்களை மருத்துவ கலந்தாய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்காக தனியாக எந்த விதமான ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை. மேலும், கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
இது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே, இந்திய அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இடஒதுக்கீடு வழங்காமல் மருத்துவ மேற்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்குக் கலந்தாய்வு நடத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.