நிவர் புயலானது தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி, தமிழகம் - புதுச்சேரிக்கு இடையே நேற்று நள்ளிரவு கரையைக் கடந்த நிலையில், அது பற்றிய செய்திகள் ஊடகங்களில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வந்தது.
இதற்கிடையே, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சுட்டுரைப் பக்கத்தில், நிவர் புயல் தொடர்பான தகவல்கள் ஹிந்தியில் பகிரப்பட்டதால், அது மேலும் புயலைக் கிளப்பியது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் புயல் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து ஹிந்தியில் தெரிவிக்கப்பட்டு வந்தது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிவர் புயலால் பாதிக்கப்படும் மாநிலங்களாக தமிழகம், ஆந்திரம், புதுச்சேரி ஆகியவை கண்டறியப்பட்டன. ஒன்று தமிழ் அல்லது தெலுங்கில் பதிவுகளை இட்டிருக்கலாம். ஆனால், தென்மாநில மக்களுக்கு பயனளிக்காத ஹிந்தியில் பதிவுகளை இட்டது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையும் படிக்கலாமே.. புயலாக வலுவிழந்தது நிவர் புயல்
ஹிந்தியில் வெளியான சுட்டுரைப் பதிவுகளுக்கு ஏராளமானோர் கடும் கண்டனங்களை கருத்துகளாக பதிவிட்டிருந்தனர்.
சமூக வலைத்தளங்களில் தீவிரமாக செயல்பட்டு வருவோர், கடும் கண்டனத்தையும் பதிவிட்டனர். ஹிந்தியில்தான் எச்சரிக்கை தகவல்களை பதிவிடுவீர்கள் என்றால், தமிழகத்தின் வரிப்பணத்தை பயன்படுத்துவது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர். இதனால், ஹிந்திக்கு எதிராக வழக்கமாக சுட்டுரையில் அதிகம்பேரால் பயன்படுத்தப்படும் #ஸ்டாப்ஹிந்திஇம்போசிஷன் என்ற வார்த்தை நேற்றும் சுட்டுரையில் முன்னிலைப் பெற்றது.