சென்னை: சென்னை: அதிமுக முதல்வர் வேட்பாளராக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக முதல்வர் வேட்பாளர் தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும் செவ்வாய்க்கிழமை தனித்தனியே தொடர்ந்து நள்ளிரவு 3 மணிவரை ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை நடத்திய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் காலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், புதன்கிழமை காலை 10 மணிக்கு நல்ல செய்தி வரும். மீண்டும் அதிமுக ஆட்சி அதிகாரத்தில் அமர்வதற்கான ஆக்கப்பூர்வமான பணிகள் நடைபெற்று வருவதாக வைத்திலிங்கம் கூறினார்.
ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் பேட்டியளிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தமிழகத்தில் 2021 இல் நடைபெற் உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி போட்டியிடுவார் என்று ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது முதலில் பேசிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, 2017 ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழுவில் முடிவு செய்தபடி கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 5 பேரும், முதல்வர் பழனிசாமி ஆதரவாளர்கள் 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.
11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயகுமார், சி.வி. சண்முகம், முன்னாள் அமைச்சர் மோகன், ஜேசிடி பிரபாகர், இரா.கோபாலகிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், மாணிக்கம் எம்.எல்.ஏ ஆகிய 11 பேர் இடம் பெற்றுள்ளனர்.
வழிகாட்டுதல் குழுவில் பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன், செங்கோட்டையன், செம்மலை, பொள்ளாச்சி ஜெயராமன், அன்வர்ராஜா, நத்தம் விஸ்வநாதன் போன்ற மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.