இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தேர்தல் ஆணையம் நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும்: டி.ராஜா பேட்டி

தேர்தல் ஆணையம் தன்னுடைய முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி நியாயமான முறையில் நடுநிலையோடு தேர்தலை நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

News image
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி.ராஜா
Updated On :2 ஏப்ரல் 2021, 6:13 am

DIN

சிவகங்கை: தேர்தல் ஆணையம் தன்னுடைய முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி நியாயமான முறையில் நடுநிலையோடு தேர்தலை நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது : மத்தியில் ஆளும் பாஜக மதம், ஜாதி, இனம், கலாசாரம் என்கிற பெயரில் மக்களை பிளவுப்படுத்துகிறது. பாஜகவின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர், தலித் பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் பாஜக இயக்கும் அரசாக அதிமுக உள்ளது. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெர்வித்துள்ளார். ஆனால் எந்த திட்டத்தை நிறைவேற்றியுள்ளனர் என தெரியவில்லை.

புதிய கல்விக் கொள்கை, குடியுரிமை திருத்த சட்டம், புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு உள்ளிட்டவற்றுக்கு ஆதரவு அளித்தமைக்காக மக்கள் விரைவில் நல்ல தீர்ப்பினை வழங்குவர். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. அதற்கு தீர்வு காணப்படவில்லை. ஐ.நா.சபையில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது அதனை ஆதரிக்காமல் இந்தியா நடுநிலை வகிப்போம் என விலகியது கண்டனத்துக்குரியது.

இதன்காரணமாக, இலங்கை அரசு வேண்டுமானால் இந்தியாவை பாராட்டலாம். ஆனால் அங்கு வாழும் தமிழர்கள் இந்தியாவை மன்னிக்கமாட்டார்கள். இங்கு மாற்றம் ஏற்பட வேண்டும். வரும் பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்.

மாநிலத்தைப் பொருத்தவரை அது அதிமுகவின் பெரும் வீழ்ச்சியாக இருக்கும். அதேபோன்று மத்தியில் பாஜகவுக்கு அழிவின் தொடக்கமாக அமையும். தற்போதைய தேர்தல் இந்திய அளவில் பெரும் எதிர்ப்பார்பை உருவாக்கியுள்ளது. பணம் மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தி தமிழகத்தில் வெற்றியை பெற்று விடலாம் என பாஜக-அதிமுக கூட்டணி கருதுகிறது. அதற்கு இடம் கொடுக்காமல் தேர்தல் ஆணையம் தன்னுடைய முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி நியாயமான முறையில் நடுநிலையோடு தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.

அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலர் கண்ணகி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.