ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்களுக்கு தற்காலிகமாக திறக்க அனுமதி: அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்களுக்கு தற்காலிகமாகத் திறக்க அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
ஸ்டெர்லைட்
ஸ்டெர்லைட்

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்களுக்கு தற்காலிகமாகத் திறக்க அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் கடந்த 3 ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்த ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. 

இதில், ஸ்டெர்லைட்டை திறக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல.  கரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் தற்போது அதிகரித்துள்ளது ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் செயல்பட 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதிக்கலாம் என்று முதல்வர் கூறியிருந்தார். 

இதற்கு திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதேநேரத்தில் 'இது தற்காலிகம் மட்டுமே, 4 மாதங்களுக்கு மேல் அனுமதி வழங்கக்கூடாது. எந்த காரணம் கொண்டும் ஆலையை நிரந்தரமாக திறக்க அனுமதி வழங்கக்கூடாது. ஆலையை இயக்க அரசுதான் மின்சாரம் தர வேண்டும், ஒரு குழுவை அமைத்து கண்காணிக்க வேண்டும்' உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்திருந்தன. 

இதனை முதல்வர் ஏற்றுக்கொண்ட நிலையில் தற்போது 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை தற்காலிகமாக இயக்க அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 

1) உச்சநீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்தில் அமைந்துள்ள பிராண வாயு உற்பத்தி மற்றும் அதைச் சார்ந்த இயந்திரங்களை மட்டும் சீர் செய்து இயக்கி கொள்ள தற்காலிகமாக (நான்கு மாதங்களுக்கு  மட்டும்) கோவிட்-19 நோய் தொற்று காலம் முடியும் வரை தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் வழங்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி இயங்க அனுமதிக்கலாம்.

பிராண வாயுவின் தேவையைக் கருத்தில்கொண்டு, நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் இந்த காலம் பின்னர் நீட்டிக்கப்படலாம்.

இத்தொழிற்சாலையில் எக்காரணத்தைக் கொண்டும், தொழிற்சாலையின் தாமிர உற்பத்தி உட்பட எந்தவித உற்பத்தியையும், மின்உற்பத்தி அலகையும் எக்காரணம் கொண்டும் திறக்கவோ, இயக்கவோ அனுமதிக்கப்படமாட்டாது. இந்த குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.

2) உற்பத்தி செய்யப்படும் பிராண வாயுவில் தமிழ்நாட்டிற்கே முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழ்நாட்டின் தேவைபோக அதிகப்படியாக உள்ளதை மட்டும் பிற மாநிலங்களுக்கு வழங்கலாம்.

3) பிராண வாயு உற்பத்தி செய்யும் பகுதியில், பிராண வாயு உற்பத்தியுடன் நேரடி தொடர்புடைய தொழில்நுட்ப பணியாளர்கள் மட்டும் உரிய அனுமதி சீட்டுடன் அனுமதிக்கப்படுவார்கள். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு உறுதி செய்யும். எக்காரணத்தைக் கொண்டும் பிராண வாயு உற்பத்தி செய்யும் அலகைத் தவிர வேறு எந்த அலகையும் செயல்பட அனுமதிக்கப்படாது.
 
4) இந்நேர்வில், தற்காலிக பிராண வாயு உற்பத்தியை கண்காணிக்க தமிழ்நாடு அரசால் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்படும்.

கண்காணிப்பு குழுவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சார் ஆட்சியர், தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தூத்துக்குடி மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர், பிராண வாயு தயாரிக்கும் தொழிற்சாலை தொழில்நுட்பத்தில் அறிவார்ந்த இரண்டு அரசு அலுவலர்கள், மற்றும் அந்த பகுதியைச் சார்ந்த பொதுமக்கள்/ சுற்றுசூழல் சார்ந்த அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் ஆலை எதிர்ப்புக் குழுவினர் ஆகியோரிலிருந்து மூன்று நபர்கள் இக்கண்காணிப்பு குழுவில் இடம்பெறுவர். இந்த குழு பிராண வாயு தயாரிக்கும் முழு பணியையும் மேற்பார்வையிடும் மற்றும் பிராண வாயு தயாரிக்கும் ஆலையை இயக்குவது பற்றி இந்த குழு முடிவெடுக்கும்.

5) தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பிராண வாயு தமிழ்நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய பயன்படுத்த வேண்டும். தமிழ்நாட்டின் தேவைக்குப் போக மீதமுள்ள பிராண வாயு பிற மாநிலங்களுக்கு வழங்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com