ஆடி 18:  களையிழந்த காவிரிக் கரைகள்; படித்துறைகள் வெறிச்சோடின

திருச்சியில் இரண்டாவது ஆண்டாக ஆடிப் பெருக்கு (ஆடி 18) நாளில் காவிரிக் கரைகள் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
ஆடி 18:  களையிழந்த காவிரிக் கரைகள்; படித்துறைகள் வெறிச்சோடின
ஆடி 18:  களையிழந்த காவிரிக் கரைகள்; படித்துறைகள் வெறிச்சோடின

திருச்சி: திருச்சியில் இரண்டாவது ஆண்டாக ஆடிப் பெருக்கு (ஆடி 18) நாளில் காவிரிக் கரைகள் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

கரோனா பரவலைத் தடுக்க மக்கள் கூடும் இடங்களில் ஆக.8ஆம் தேதி வரை விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக, காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் நிலையிலும் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

தமிழ் மாதங்களில் பெண்களுக்கு உகந்ததாகக் கருதப்படும் ஆடி மாதத்தின் முக்கிய நாளான ஆடி 18ஆம் தேதி ஆடிப் பெருக்கு நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காவிரியாற்றின் கரைகள் மற்றும் படித்துறைகளில் பொதுமக்கள் கூடி புனித நீராடி, பூஜைகள் செய்து வழிபாடு நடத்துவர். புதுமணப் பெண்கள் கணவருடன் வந்து நீராடி, புத்தாடை அணிந்து தாலிக் கயிறு மாற்றும் வைபவத்திலும் ஈடுபடுவர்.காவிரிப் படித்துறைகளில் பெண்கள் வாழை இலையில் பழம், பூ, பனை ஓலை, மஞ்சள் கயிறு உள்ளிட்டவற்றை வைத்து தண்ணீருக்கு வழிபாடு நடத்துவர். 


ஆண்கள், பெண்கள் என அனைவரும் ஒருவருக்கொருவர் புதிய மஞ்சள் கயிறுகளை அணிந்து கொள்வர். புதுமணத் தம்பதிகள் சிறப்பு வழிபாடுகள் செய்து, புதிய தாலிக் கயிறு மாற்றிக் கொள்வதுடன், திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விடுவர்.

ஆடி அமாவாசை, ஆடிப் பெருக்கு ஆகிய நாள்களில் காவிரியின் பிற கரைகளைக் காட்டிலும் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கூடி வழிபடுவது வழக்கம்.  இதையொட்டி, அரசுத் துறைகள் சார்பில் பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். அம்மா மண்டபம் மட்டுமின்றி காந்தி, ஓடத்துறை, தில்லைநாயகம், அய்யாளம்மன் உள்ளிட்ட காவிரியாற்றின் பிற படித்துறைகளிலும் மக்கள் வழிபாடு நடத்துவர். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக இந்த காட்சிகளை காண முடியவில்லை.

கரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக காவிரிக் கரைப் பகுதிகள் செவ்வாய்க்கிழமை வெறிச்சோடி காணப்பட்டன. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் வெறிச்சோடிக் காணப்பட்டது. இதேபோல், காவிரியின் பிற கரைகளும் வெறிச்சோடிக் கிடந்தன. இருப்பினும், மக்கள் தங்கள் வீடுகளிலேயே ஆடிப் பெருக்கு வழிபாடு நடத்தினர்.

காவிரிக் கரையையொட்டி மிக அருகில் வசிக்கும் வசிக்கும் சிலர், வீட்டிலேயே நீராடிவிட்டு, வீட்டருகே உள்ள படித்துறைகளில் ஆடிப் பெருக்கு வழிபாடு நடத்தினர். கல்லணைக்கு செல்லும் பகுதியில் போலீஸார் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் தடையை மீறி புது மணத் தம்பதிகள் சிலர் குடும்பத்தினருடன் வந்து வழிபாடு நடத்தினர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கரோனா பரலவைத் தடுக்கும் நடவடிக்கையாகவே அம்மா மண்டபம் படித்துறையில் புரோகிதம் கிடையாது என்று அறிவித்துள்ளனர். கடந்தாண்டு ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு நாளிலும் அம்மா மண்டபத்துக்கு மக்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்தநிலையில், இந்தாண்டும் மக்கள் வெளியே வர முடியாமல் காவிரிக் கரைகள் வெறிச்சோடியுள்ளன. நிகழாண்டு ஆடிப் பெருக்கு கொண்டாட்டம் கரோனாவால் களையிழந்துள்ளது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com