சென்னையில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வாகனத்தின் மூலம் 29.06.2021 முதல் 03.08.2021 வரை 3,087 எண்ணிக்கையிலான கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தமிழக அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்று பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழக முதல்வர், தமிழக மக்கள் அனைவருக்கும் விலையில்லாமல் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், தமிழக அரசு கரோனா தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் மற்றும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் விலையில்லாமல் வழங்கி வருகிறது.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் பெண்கள் மற்றும் காசநோய் பாதித்த நபர்களை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும், சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ரோட்டரி சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வாகனம் மூலம் 29.06.2021 அன்று முதல் தடுப்பூசி விலையில்லாமல் செலுத்தப்பட்டு வருகிறது.
29.06.2021 முதல் 03.08.2021 வரை நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வாகனம் மூலம் 2,477 எண்ணிக்கையிலான கோவிஷீல்டு தடுப்பூசிகள், 610 எண்ணிக்கையிலான கோவேக்சின் தடுப்பூசிகள் என மொத்தம் 3,087 எண்ணிக்கையிலான கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.