குடும்பத் தகராறு: விஷம் கொடுத்ததில் 2 குழந்தைகள் பலி; மருத்துவமனையில் தாய்
காரைக்கால் : திருநள்ளாறு அருகே குடும்பத் தகராறில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து அவர்கள் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் தாய் சிகிச்சை பெற்றுவருகிறார்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதி சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன். இவர் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். இவரது மனைவி பிரியா (26). இவர்களுக்கு ஸ்ரீசந்த் (4), விஷ்ணு (2) என்ற இரு குழந்தைகள் இருந்தனர். பிரியா தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு கணவருடன் பிரியா செல்லிடப்பேசியில் பேசியதாகவும், இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. குடும்பத் தகராறில், விஷத்தை தமது 2 குழந்தைகளுக்கும் கொடுத்து தானும் குடித்துள்ளார். இந்த விவரத்தை கணவருக்கு அவர் தெரிவித்தாராம். பாலமுருகன் தமது சகோதரருக்கு விவரத்தை தெரிவித்துள்ளார்.
பாலமுருகனின் சகோரர் விரைந்து வந்த வீட்டில் மயங்கிக் கிடந்த மூவரையும் காரைக்கால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். மேல் சிகிச்சைக்காக உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 குழந்தைகளும் உயிரிழந்தது. பிரியா தீவிர சிகிச்சையில் இருந்துவருகிறார்.
இதுகுறித்து திருநள்ளாறு காவல்நிலைய காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பத் தகராறில் குழந்தைகள் இருவருக்கு விஷம் கொடுத்துவிட்டு, தாமும் விஷம் குடித்ததில் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் சேத்தூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.