நாமக்கல்: தமிழகத்தின் 23-ஆவது முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 100 நாள் நிறைவடைந்துள்ளது.
இந்த 100 நாள்களில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அவர் செயல்படுத்தியுள்ளார். இந்த சாதனைகளை விளக்கி நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என்.இராஜேஸ் குமார் நாமக்கல் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை காலை துவக்கி வைத்தார்.
நாமக்கல் மணிக்கூண்டு, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் உள்ள பொதுமக்களிடம் இனிப்பு வழங்கியும், துண்டு பிரசுரம் அளித்தும், கரோனா நிவாரண நிதி ரூ. 4000 அளித்தது, அனைத்து மகளிரும் சாதாரண அரசு நகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய கையெழுத்திட்டது, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்திற்கு தனித்துறை அமைத்து மனு பெறுவது, கரோனா கட்டணத்தை அரசு ஏற்கும் என்ற திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது என பல்வேறு நலத் திட்டங்களை விளக்கி மக்களிடையே பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு நகர பொறுப்பாளர் செ.பூபதி, மேற்கு நகர பொறுப்பாளர் சிவக்குமார், தெற்கு நகர பொறுப்பாளர் ராணா ஆனந்த், மாநில நிர்வாகிகள், இலக்கிய அணி புரவலர் சி.மணிமாறன், மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் பா.ராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.