ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரிலிருந்து இருக்கன்குடி செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த ரயில்வே மேம்பாலப் பணிக்காக ரயில்வே பீடர் சாலையில் உள்ள கடைகள் அனைத்தும் அகற்றப்படுவதாக ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து ரயில்வே பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாற்றுப் பாதையில் அமைக்க வலியுறுத்தியும் கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன் மற்றும் வட்டாட்சியர் முத்துலட்சுமியிடம் மனு அளிக்கப்பட்டது.
மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளிடம் தெரிவித்தனர். மேலும் ரயில்வே மேம்பாலம் அமைவதற்கான மாற்றுப் பாதையையும் வியாபாரிகள் சங்கம் சார்பில் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.