சீர்காழி அருகே பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக அவரது கணவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வழுதலைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(42). இவரது மனைவி ஜானகி(36) இவர்கள் இருவருக்கும் 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஹரிணி(10) என்ற மகளும், சர்வேஷ்(10) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது மர்மமான முறையில் ஜானகி தனது வீட்டில் தூக்குப்போட்டு இறந்த நிலையில் தொங்கியுள்ளார். அவரது உடலை அப்புறப்படுத்தி அருகில் இருந்த அவரது மாமனார் துரை வீட்டில் குளிப்பாட்டி அடக்கம் செய்ய வைத்திருந்தனர்.
இந்நிலையில் ஜானகியின் உறவினர்கள் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக சீர்காழி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து சென்று ஜானகியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து ஜானகியின் கணவர் சுரேஷிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.