
முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் சோதனையில் ரூ.2.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது மனைவி, மகன் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணி மகன் தரணிதரன் வீடு, ரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள தங்கமணியின் நண்பரின் ஹோட்டல் மற்றும் சேலத்தில் உள்ள அவரது உறவினர், நண்பர்கள் வீடு என 4 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும் ஈரோடு மாவட்டத்தில் தங்கமணிக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் தொழில் பங்குதாரர் என மொத்தம் 69 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் 4 இடங்களில் சோதனை நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமின்றி 1.130 கிலோ தங்க நகைகள், சுமார் 40 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டறியப்பட்டன. சான்று பொருள்களான கைப்பேசிகள், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், கணினி ஹார்டு டிஸ்க்குகள், வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், 69 இடங்களில் (நாமக்கல் மாவட்டம்–33, சென்னை–14, ஈரோடு–8, சேலம்–4, கோயம்புத்தூர்–2, கரூர்–2, கிருஷ்ணகிரி–1, வேலூர்–1, திருப்பூர்–1, பெங்களூரு–2, ஆந்திர மாநிலம் சித்தூர்–1) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையீனர் புதன்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.