புதுக்கோட்டை அருகே காவல்துறை துப்பாக்கி சுடும் தளத்தில் பயிற்சியின் போது தவறுதலாக குண்டு பாய்ந்து ஒரு சிறுவனுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை கீரனூர் சரக காவல் எல்லைக்குள்பட்ட பசுமலைப்பட்டி என்ற இடத்தில் தமிழ்நாடு காவல்துறையின் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைந்துள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை சிஆர்பிஎஃப் போலீஸார் துப்பாக்கிப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவன் புகழேந்தியின் தலையில் குண்டு பாய்ந்தது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகழேந்தி, மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளத்தை இங்கிருந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நார்த்தாமலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்டாட்சியர் எம்எஸ். தண்டாயுதபாணி உள்ளிட்ட வருவாய்த்துறையினரும் காவல் துறையினரும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சிறிதுநேரத்தில் சாலை மறியல் விளக்கிக் கொள்ளப்பட்டது.
இதற்கிடையே பசுமலைப்பட்டி துப்பாக்கிச் சுடும் தளம் செயல்படுவதை தற்காலிகமாக தடை செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.
தொடர்ந்து அதிகாரிகள் குழு அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.