அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரத்தில் சென்னை, சேதுபதி அறக்கட்டளை சார்பில் வழக்குரைஞர்கள், வழக்குரைஞர் உதவியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை, சேதுபதி அறக்கட்டளை சார்பில் கிராமப்புற மாணவர்கள், நலிவடைந்தோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து அம்பாசமுத்திரம் மற்றும் சேரன்மகாதேவி வட்டார வழக்குரைஞர்கள் மற்றும் வழக்குரைஞர் உதவியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மூத்த வழக்குரைஞர்கள் ராமகிருஷ்ணன், பிரதாபன், ஜோசப் ஆரோக்யராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். நிகழ்ச்சியில் வழக்குரைஞர்கள், வழக்குரைஞர் உதவியாளர்கள் நூலகத்திற்கு நூல்கள், இணைய நூலக அனுமதி உள்ளிட்டவை வழங்கக் கோரிக்கை விடுத்தனர்.
சேதுபதி அறக்கட்டளை நிரந்தர அறங்காவலர் அஜய் படையப்பன் சேதுபதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி வட்டார மூத்த மற்றும் இளம் வழக்குரைஞர்கள் பயன்பாட்டிற்காக சட்டம் மற்றும் வழக்குத் தீர்ப்புகள் குறித்த நூல்களை அன்பளிப்பாக வழங்குவதாகத் தெரிவித்தார்.
மேலும் வழக்குரைஞர்களுக்கு நீதிபதி தேர்வுக்கு பயிற்சி வழங்க இலவச வகுப்புகள் மற்றும் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு, வங்கித் தேர்வு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு இலவச வகுப்புகள் தொடங்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் வழக்குரைஞர்கள் ஜோயல்ஹென்றி, ஆதிமூல கிருஷ்ணன், விஜயா ஆதிமூலம், குமாரவேல் பாண்டியன், ராமராஜ்பாண்டியன், சுவாமிநாதன், சரவணன், முகமது காசிம், சைலபதி, தேவசகாயம் உள்பட அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள், வழக்குரைஞர்கள், வழக்குரைஞர் உதவியாளர்கள் உள்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை வழக்குரைஞர் நவமணி தொகுத்து வழங்கினார். அம்பாசமுத்திரம் வழக்குரைஞர் சங்கத் தலைவர் கந்தசாமி வரவேற்றார். வழக்குரைஞர் மதியழகன் நன்றி கூறினார்.