கம்பம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைக்காலம் முடிந்ததால், நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
முல்லைப் பெரியாறு அணையில் கடந்த பிப்.1 ஆம் தேதி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 370 கன அடியாக இருந்தது, பிப் .7 இல் வினாடிக்கு 200 கன அடியாகவும், அதன் பிறகு படிப்படியாக குறைந்து வெள்ளிக்கிழமை நிலவரப்படி வினாடிக்கு 60 கன அடியாகவும் தண்ணீர் வரத்து வந்தது.
காரணம் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைக்காலம் முடிந்ததால், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை, இதனால் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 130 அடி உயரமாகவும் (முழு கொள்ளளவு 142 அடி) அணையில் நீர் இருப்பு 4 ஆயிரத்து 697 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 60 கன அடியாகவும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம், வினாடிக்கு 600 கன அடியாகவும் இருந்தது. பெரியாறு அணை தேக்கடி ஏரி பகுதிகளில் மழை இல்லை.
மின் உற்பத்தி: லோயர் கேம்பில் உள்ள பெரியாறு மின்சார நிலையத்தில், அணையிலிருந்து வெளியேற்றப்படும் 600 கன அடி தண்ணீர் மூலம் நான்கு மின்னாக்கிகளில் இரண்டு மின்னாக்கிகள் மட்டும் செயல்படுகிறது.
முதல் மின்னாக்கியில் 26 மெகாவாட் மூன்றாம் மின்னாக்கியில் 25 மெகாவாட் என மொத்தம் 51 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.