ஈரோடு: ஈரோடு தண்ணீர்பந்தல் பாளையம் பகுதியில் உள்ள சாக்கடையில் சாக்கடை நீர் சிவப்பு நிறத்தில் செல்வதாக அப்பகுதி மக்கள் மாசு கட்டுபாட்டு வாரிய அலுவலகத்திற்கு அளித்த தகவலின் பேரில் அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் அக்ரஹாரம், பெரியசேமூர், சூளை மற்றும் தண்ணீர்பந்தல் பாளையம் ஆகிய பகுதிகளில் ஏராளமான சாய ஆலைகள்,தோல் பதனிடும் ஆலைகள் உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற ஆலைகளிலிருந்து சுத்திகரிககப்படாமல் வெளியேறும் கழிவுகளால் நீர்நிலைகள் பெரிதும் பாதுக்கப்படுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தண்ணீர்பந்தல் பாளையம் பகுதியில் உள்ள சாக்கடையில் சாக்கடை நீர் சிவப்பு நிறத்தில் செல்வதாக அப்பகுதி மக்கள் மாசு கட்டுபாட்டு வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சாக்கடையில் சிவப்பாக செல்லும் நீர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்டமாக தண்ணீர்பந்தல் பாளையத்தில் உள்ள பாலத்தின்கீழ் கொட்டப்பட்டுள்ள சாய கழிவு மூட்டைகள் மூலம் நிறம் மாற்றம் அமைந்திருப்பது தெரியவந்துள்ளது.
அந்த கழிவுகளை கொட்டியது எந்த ஆலை என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் ஈரோட்டில் சாய கழிவு நீரை கால்வாயில் கலந்ததை அடுத்து 30 சாய ஆலைகள் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.