தஞ்சாவூர் ரயிலடியில் புதன்கிழமை நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் அதிமுக - அமமுக இடையே தகராறு ஏற்பட்டது.
தஞ்சாவூர் ரயிலடியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலை உள்ளது. அவரது பிறந்த நாளையொட்டி, அதிமுக, அமமுக சார்பில் அச்சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இச்சிலையைச் சுற்றியுள்ள கம்பியில் அதிமுக கொடிகள் கட்டப்பட்டிருந்தன. இதன் பின்னர் இச்சிலையைச் சுற்றி பெரிய அளவில் அமமுக கொடிகள் கட்டப்பட்டன. எனவே பெரிய கொடிகளை அகற்றுமாறு அமமுகவினரிடம் காவல் துறையினர் அறிவுறுத்தினர். இது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே அமமுகவினரில் சிலர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் எச்சரித்ததால், அவர்களை மற்றவர்கள் அழைத்துச் சென்றனர்.
அப்போது ஊர்வலமாக வந்த அதிமுகவினரில் சிலர் அமமுக கொடியை அகற்றினர். இதனால் அதிமுகவினருக்கும், அமமுகவினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் அமமுகவினரை காவல் துறையினர் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினருக்கும், அமமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதேபோல அதிமுகவினருக்கும் அமமுகவினருக்கும் இடையேயும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரையும் காவல் துறையினர் சமாதானப்படுத்தியதை அடுத்து, அமமுகவினர் கலைந்து சென்றனர்.
என்றாலும், அப்பகுதியில் காவல் துறையினர் அதிக அளவில் வரவழைக்கப்பட்டுப் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.