

கோவை: கோவை தொண்டாமுத்தூர் தேவராயபுரம் ஊராட்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய ஸ்டாலின் "வரும் 4 மாதங்களில் அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். தமிழகத்தில் கோவையில் தான் ஊழல் அதிகமாக உள்ளது. அதற்கு காரணம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தான் என்றார்.
இதைடுத்து, கூட்டத்தில் இருந்த மக்களிடம் ஸ்டாலின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும். நீர்வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்நிலையில், கூட்டத்தில் இருந்து எழுந்த பெண் ஒருவர் "கிராம சபைக் கூட்டத்தை எதற்கு நடத்துகிறீர்கள்" என ஸ்டாலினிடம் கேட்டார். அப்போது, நீங்கள் எந்த ஊர் என அவர் கேட்டதைத் தொடர்ந்து மைல்கல் என பெண் கூறினார். இதைடுத்து, அது எந்த சட்டப்பேரவைத் தொகுதியில் வருகிறது என ஸ்டாலின் கேட்டார்.
அப்போது, ஆவேசமடைந்த அந்தப் பெண் இது கூடத் தெரியாமல் தான் நீங்கள் துணை முதல்வராக இருந்தீர்களா எனக் கேட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் கோவை சுகுணா புரம் அதிமுக மகளிர் அணியைச் சேர்ந்த பூங்கொடி( 40) எனத் தெரிய வந்தது. அவருடன் கூட்டத்தில் கலந்து கொண்ட நபர் மீது திமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து இருவரையும் காவலர்களிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து தொண்டாமுத்தூரில் ஸ்டாலின் செல்லும் வழியில் அதிமுகவினர் சாலை மறியலுக்கு முயன்றனர். எஸ்.பி. அருளரசு தலைமையிலான காவலர்கள் அவர்களை அப்புறப்படுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.