வாழப்பாடி: வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் கொள்கைகளை பரப்பும் நோக்கில், அரசியல் கட்சி தொடங்கிய முதியவர் ஒருவர், தமிழகம் முழுவதும் சைக்கிளில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க வேண்டும். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என திருவருட்பா பாடிய, சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்த வள்ளலார் ராமலிங்க அடிகளார், அணையா தீபம் ஏற்றி, அனைவருக்கும் அன்னதானம் வழங்குதலை ஊக்குவித்தவர். புலால் மறுப்பு கொள்கையை கடைபிடித்தவர். ஒளியை கடவுளாக கருதுவதாக தெரிவித்தவர்.
இத்தகைய பெருமைக்குரிய வள்ளலாரின் கொள்கைகளை தமிழகம் முழுவதும் அனைத்து பகுதி மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் பரப்ப முடிவுசெய்த அரியலூர் மாவட்டம் செம்பியக்குடி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் செ.சக்கரவர்த்தி (60) என்பவர், தனது கருத்தோடு ஒப்புமை கொண்ட நண்பர்களோடு இணைந்து, சுத்த சன்மார்க்க கழகம் எஸ்.எஸ்.கே., என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.
தேர்தல் ஆணையத்திடம் பதிவு பெறாத இக்கட்சிக்கு வள்ளலாரின் கொள்கைகளை வைத்துக்கொண்டு, புலால் மறுத்து அனைவரும் நலமோடு வாழ வேண்டும். ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என்பது குறித்து, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சைக்கிளில்0சென்று பொதுமக்களிடையே பிரசாரம் செய்து வருகிறார்.
எளிய தோற்றமளிக்கும் இவரது இந்த நூதன பிரசாரம், பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதுகுறித்து முதியவர் சக்கரவர்த்தி கூறியதாவது:
எனக்கு பட்டு என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். வள்ளலாரின் கருத்துக்கள், கொள்கைகள், மனித குலத்திற்கு ஏற்றது. இவரது கொள்கைகளும் எங்களது அரசியல் கட்சி கொள்கைகளும் ஒன்றரே. எனவே, எங்களது கொள்கைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்காக, கடந்த 10 மாதமாக சைக்கிளில் சென்று பிரசாரம் செய்து வருகிறேன். இதில் மனதிற்கு மனநிறைவு கிடைக்கிறது என்றார்.