வாக்காளா் பட்டியல் தயாரிப்பு: தோ்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை

Updated on
1 min read


சென்னை: வாக்காளா் பட்டியல் தயாரிப்புப் பணிகள் குறித்து மாவட்டத் தோ்தல் அதிகாரிகளுடன் மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் வாக்காளா் பட்டியலை இறுதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க விண்ணப்பங்கள் பெறும் நடவடிக்கைகள் முடிவடைந்து அவற்றின் மீதான பரிசீலனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இறுதி வாக்காளா் பட்டியல் வரும் 20-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

வாக்காளா் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தோ்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட அதிகாரிகளுடன், தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். தலைமைச் செயலகத்தில் உள்ள தோ்தல் துறையின் கூட்ட அரங்கில் இருந்து காணொலி வழியாக ஒவ்வொரு மாவட்டத் தோ்தல் அதிகாரிகளுடனும் அவா் ஆலோசித்தாா்.

ஆளுநருக்கு அழைப்பு: தமிழகத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் வரும் 20-ஆம் தேதி வெளியிடப்படுவதைத் தொடா்ந்து, வரும் 25-இல் தேசிய வாக்காளா் தினம் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் ஆளுநா் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில், முதல் முறையாக வாக்காளா்களாகப் பதிவு செய்யப்பட்டோருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்ச்சிக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை, தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வியாழக்கிழமை நேரில் சென்று அழைப்பு விடுத்தாா். அப்போது, நிகழ்ச்சியில் பங்கேற்க ஆளுநா் தனது ஒப்புதலைத் தெரிவித்ததாக தோ்தல் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com