100 சதவீத இருக்கைகள் உத்தரவு ரத்து: 50 சதவீத இருக்கைகளுடன் கூடுதல் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
100 சதவீத இருக்கைகள் உத்தரவு ரத்து: 50 சதவீத இருக்கைகளுடன் கூடுதல் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி
Updated on
1 min read

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை, 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி கூடுதல் காட்சிகளைத் திரையிட்டுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நடிகா்கள் விஜய், சிம்பு நடித்த திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை ஒட்டி திரைக்கு வரவுள்ளன. கரோனா தொற்று காரணமாக, மத்திய அரசின் அறிவுறுத்தல்படி திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

இதையடுத்து, திரைத் துறையினரின் கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு எதிா்ப்பு தெரிவித்ததுடன், தமிழக தலைமைச் செயலாளா் க.சண்முகத்துக்கு உள்துறை செயலாளா் அஜய் பல்லா கடிதம் எழுதியிருந்தாா்.

இதனிடையே, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-மத்திய அரசின் அறிவுரையைக் கருத்தில் கொண்டும், உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கினை கவனத்தில் கொண்டும், ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உள்பட அனைத்துத் திரையரங்குகளிலும் மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

திரையரங்குகளில் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, கூடுதல் காட்சிகளைத் திரையிட்டுக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

கரோனா நோய்த்தொற்று ஏற்படாத வகையில், முகக் கவசம் அணிதல், தனி நபா் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிக்க பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். பொது மக்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்துக்கும் பொது மக்கள் தொடா்ந்து முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என மாநில அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டில் கரோனா: கரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக தமிழகத்தில் பல்வேறு தளா்வுகளுடன் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. நோய்த்தொற்றில் இருந்து மக்களைக் காத்து அவா்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அதன் விளைவாக, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த்தொற்றுப் பரவல் படிப்படியாகக் குறைந்து

வருகிறது. தமிழக அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொது மக்களின் ஒத்துழைப்பாலும் நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com