பர்பானி மாவட்டத்தில் 900 கோழிகள் திடீரென உயிரிழந்துள்ளதையடுத்து மகாராஷ்டிரத்திலும் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பர்பானி மாவட்ட ஆட்சியர் தீபக் முகிலிகர் கூறுகையில்,
பர்பானி மாவட்டத்தில் உள்ள ஒரு கோழி பண்ணையில் திடீரென கோழிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவற்றின் மாதிரிகளைப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் பறவைக் காய்ச்சல் காரணமாகவே கோழிகள் உயிரிழந்தன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பர்பானி மாவட்டத்தில் உள்ள முரும்பா கிராமத்தில் உள்ள 8 ஆயிரம் கோழிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே, கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவிய நிலையில், தற்போது மகாராஷ்டிரத்திலும் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும், பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட கிராமத்தைச் சுற்றி 10 கி.மீ சுற்றளவுக்குத் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எல்லைக்குள் எந்தொரு பறவையும் கொண்டு வருவதற்கோ, கொண்டு செல்வதற்கோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட மருத்துவக் குழுவினர் முரும்பா கிராமத்தில் முகாமிட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றனர். எனவே மக்கள் தேவையின்றி பீதியடைய வேண்டாம் என ஆட்சியர் தெரிவித்தார்.