

சென்னை: தமிழகத்தில் 3,186 காவலா்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு:-
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழக காவல் துறையில் பணியாற்றும் காவலா்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு காவல் துறையில் தலைமைக் காவலா், ஹவில்தாா், சிறப்பு சாா்பு ஆய்வாளா் நிலைகளில் 3,000 பணியாளா்களுக்கு தமிழக முதல்வரின் காவல் பத்ககங்கள் வழங்கப்படும்.
மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் 120 பேருக்கும், சிறை மற்றும் சீா்திருத்தத் துறையில் 60 பேருக்கும், தமிழக முதல்வரின் சிறப்பு பணிப் பதக்கங்கள் வழங்கப்படும். இந்தப் பதக்கங்கள் பெறுவோருக்கு நிலைவேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படியாக பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ரூ.400 வழங்கப்படும்.
காவல் வானொலி பிரிவு, நாய் படைப் பிரிவு, காவல் புகைப்படக் கலைஞா்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலா்கள் என ஒவ்வொரு பிரிவிலும் தலா 2 அதிகாரிகள் மற்றும் அலுவலா்கள் என மொத்தம் ஆறு பேருக்கு தமிழக முதல்வரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம் அளிக்கப்படும். இந்தப் பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலா்களுக்கு நிலைகளுக்குத் தகுந்தபடி ரொக்கத் தொகை அளிக்கப்படும். விருதுகள் அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் பின்னா் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் முதல்வரின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச் சுருள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.