மயிலம் அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், வீட்டிலிருந்தவர்களை கத்தியைக் காட்டி மிரட்டி தங்க நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே சின்னநெற்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் 57. கிளை அஞ்சலக அதிகாரி. இவர் குடும்பத்தோடு வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டுக்கு வந்த 4 மர்ம நபர்கள் இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வெங்கடேசன், அவரது மனைவி சுமதி உள்ளிட்ட அனைவரையும் கத்தியை காட்டி மிரட்டி, பீரோவில் இருந்த 13 பவுன் நகை, 65 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதனையடுத்து வெங்கடேசன் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார், மயிலம் காவலர்கள், டிஎஸ்பி கணேசன் உள்ளிட்டோர் சின்னநெற்குணம் பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர். கிராம பகுதியில் தொடரும் திருட்டுச் சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.