திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தகுதியாக உள்ளதா என்பது குறித்து அரசியல் கட்சிகளின் முன்னிலையில் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணிகளை முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலருமான கே. என். நேரு சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சி மாவட்டத்தில், மணப்பாறை, திருவரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி) ஆகிய 9 பேரவை தொகுதிகள் உள்ளன.
இந்த 9 தொகுதிகளிலும் 2,537 வாக்குச் சாவடிகள் உள்ளன. வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மகராஷ்டிரத்திலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. 9 தொகுதிகளிலும் 5686 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4341 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 4 ஆயிரத்து 686 விவிபேட் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்த எந்திரங்களை சரிபார்க்கும் பணி திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் எப்போதும் பார்வையிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, தனது கட்சி நிர்வாகிகளுடன் இந்த பணிகளை சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெங்களூரைச் சேர்ந்த பெல் நிறுவன பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.